புரட்சி..புதிய கல்விக்கொள்கையால் நாட்டுக்கு வளர்ச்சி..வளர்ச்சிக்கு 5 மந்திரங்கள் சொன்ன ஆளுநர் ரவி
புதிய கல்விக்கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடையமுடியும். இந்த இலக்கை அடைய 5 மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.
சென்னை: புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என்று ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். சிலர் அதை அறியாமையால், படிக்காமல் புதிய கல்விகொள்கையை எதிர்த்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடையமுடியும் என்றும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
சின்மயா வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் பாரத நாடு மட்டுமே உலகில் அனைவரும் சமம் என்ற பார்வையைக் கொண்டது என கூறினார்.
பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் என்னை பொருத்தவரை வேறில்லை. வாழ்க்கைக்கான அனைத்தும் கீதையில் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், "ஆங்கில ஆட்சியே உயர்வானது என்ற காலணி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியேறி, நமது பாரம்பரியம் மீது பெருமைகொள்ள வேண்டும். ஆங்கிலேயே ஆட்சி மகிழ்வானது என்று உயர் பதவியில் இருக்கும் சிலர் பேசுகின்றனர், இது பரிதாபத்திற்குரியது. ஆங்கிலேய காலத்தில் இருந்து பிரிவினை மேலோங்கியது அது இனம், மதம் என தற்போதும் தொடர்கிறது அதனை மறந்து அனைவரும் ஒன்றே என்கிற எண்ணத்துடன் வளர வேண்டும்" என்று கூறினார்.
மேலும், இனி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகை மகிழ்சியான உலகமாக கொண்டு செல்லும் கடமை இந்தியாவிற்கு உள்ளது. புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது. சிலர் அதை அறியாமையால், படிக்காமல் புதிய கல்விகொள்கையை எதிர்த்து வருகின்றனர். புதிய கல்விக்கொள்கையால் மட்டுமே இந்தியாவின் இலக்கை அடையமுடியும். இந்த இலக்கை அடைய 5 மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். முழுவதும் வளர்ந்த நாடாக வேண்டும் என்கிற இலட்சியம் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது. குறிப்பாக, இந்த கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழிக்கொள்கை போன்ற அம்சங்களை திமுக கடுமையாக எதிர்க்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ச்சியாக புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்துவருகிறது.
கடந்த மே மாதம் இணையவழி கல்வி, புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து மாநிலங்களின் கல்விச் செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதை, தமிழக அரசு புறக்கணித்தது.அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாநில அரசின் கருத்துகள் மற்றும் பரிசீலனைகளைத் தெரிவிக்க, மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களான மும்மொழிக் கொள்கை, அனைத்து இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு போன்றவற்றை எதிர்த்து, மாநிலத்தின் சொந்த கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசு தனது கருத்தைத் தான் பதிவு செய்துள்ளதே தவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் கூறியிருந்தார். இதுவரை தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை எழுத்துப்பூர்வமாக எதிர்க்கவில்லை. தமிழ்நாடு அரசு மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை வகுக்க குழு அமைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்களது பெருமையை வெளிப்படுத்திக் கொள்ளவே இது மாதிரியான குழுக்களை அமைத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
தடை செய்த போது டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை தமிழ்நாட்டில் நடத்திய பிஎப்ஐ: ஆளுநர் ஆர்.என்.ரவி