நமீதா, கல்வெட்டு ரவி, அண்ணாமலை.. புதுசு கண்ணா புதுசு.. பாஜகவில் குவியும் புது முகங்கள்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜகவில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக புது வரவுகள் கூடிக்கொண்டே செல்கின்றன.
குறிப்பாக பாஜக மாநில தலைவராக எல்.முருகன் பதவியேற்றது முதல் பல்வேறு பிரபலங்களை கட்சியில் புதிதாக இணைத்து வருகிறார்.
நமீதா தொடங்கி அண்ணாமலை வரை பாஜகவில் இணைந்த பலருக்கும் கட்சியால் ஆதாயமா இல்லை அவர்களால் கட்சிக்கு ஆதாயமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன.
இந்தியாவுக்கே முதலிடம்- சீனாவுக்கு அம்பந்தோட்டாவை கொடுத்தது தவறு- இலங்கை வெளியுறவு செயலர் கொலம்பகே
எல்.முருகன்
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்ட போது இங்குள்ள அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பலருக்கு அதிர்ச்சி கலந்து ஆச்சரியம் ஏற்பட்டது. தலைவர் பதவிக்கான ரேஸில் முருகன் பெயரே இல்லாத நிலையில் அவர் அந்த பதவியை கைப்பற்றினார். யாராலும் யூகிக்கவே முடியாத நிலையில் மேலிடத் தொடர்புகள் மூலம் காய் நகர்த்தி தலைவர் பதவியில் அமர்ந்தார் எல்.முருகன்.
கொரோனா முடக்கம்
கடந்த மார்ச் மாதம் தமிழக பாஜக தலைவராக முருகன் பொறுப்பேற்ற சில நாட்களில் கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அவரது செயல்பாடுகளை முடக்கியது. இதனால் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த முடியாமலும் கட்சிப் பணிகளில் தனது திறமையை வெளிப்படுத்த முடியாமலும் எல்.முருகன் தவித்து வந்தார். கூடவே அதிருப்தியாளர்களை சமாதானம் செய்து அவர்களை சரிகட்டும் பணியையும் முருகன் கவனித்து வந்தார்.
டெல்லி கவனம்
இதனிடையே திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியை பாஜகவுக்கு அழைத்து வந்தது அவர் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்தது. திமுகவில் மாநில பொறுப்பில் உள்ள ஒருவரை பாஜகவுக்கு அழைத்து வந்த இணைத்த விவகாரத்தை டெல்லி தலைமை பெரிய சாதனையாக கருதி எல்.முருகனை மேலும் ஊக்கப்படுத்தியது. அதுவரை எல்.முருகனின் செயல்பாடு பற்றி கமெண்ட் அடித்து வந்த தமிழக பாஜகவினரே சற்று புருவம் உயர்த்த தொடங்கினர்.
அடுத்தடுத்து அதிரடி
கொரோனா பீதி சற்று தணியத் தொடங்கியதை அடுத்து அடுத்தக்கட்ட அரசியல் ஆட்டத்தை தொடங்கினார் எல்.முருகன். திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தை சத்தமின்றி டெல்லி அழைத்துச்சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க வைத்தார். இது முருகன் மீதான டெல்லியின் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியது. இதனிடையே தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என பலரையும் பாஜகவில் அடுத்தடுத்து புது முகங்களாக இணைக்கத் தொடங்கினார்.
பிரபலங்கள்
தமிழ்நாடு இஸ்லாமிக் ஜமாத் தலைவர் பெரோஸ், முன்னாள் சபாநாயகர் மகன் செல்லபாண்டியன், கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் பொதுமேலாளர் ப்ளாரண்ட் பெரோரா, பெப்பர்ஸ் தொலைக்காட்சி நிறுவனர் நாச்சியப்பன், புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் எம்.ஜி.ஆர். சக்ரவர்த்தி, தொழிலதிபர் தணிகைவேல், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி அம்பேத் ராஜன், பிரபல சினிமா தயாரிப்பாளர் பிரமீட் நடராஜன், வழக்கறிஞர் பால் கனகராஜ், என பெரிய பட்டாளத்தையே புது வரவுகளாக பாஜகவில் ஐக்கியப்படுத்தினார் முருகன்.
பாஜகவில் ரவுடிகள்?
இதனிடையே முருகனின் ஒரு சில செயல்பாடுகள் தமிழக பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் பலரது அதிருப்தியை சம்பாதித்தது. பணமோசடி பேர்வழி திருச்சி ராஜா, கல்வெட்டு ரவி, என பலரையும் கட்சியில் இணைத்தது அபின் கடத்திய அடைக்கலராஜுவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியது உள்ளிட்ட காரணங்களால் எல்.முருகன் விமர்சனத்திற்குள்ளானார். புதிய வரவுகள் மூலம் கட்சிக்கு ஆதாயம் கிடைக்கும் எனப் பார்த்தால் இது போன்ற நபர்கள் கட்சியால் தங்களுக்கு ஆதாயம் தேடி வருவதாக பாஜகவில் சலசலப்புகள் எழுந்துள்ளன.
வலை வீசி தேடும்
திமுக, அதிமுக, தேமுதிக, என அனைத்து கட்சிகளில் இருந்தும் உள்ளூரில் செல்வாக்கு மிக்க நபர்களை பாஜகவுக்கு இழுப்பதற்கான அசைன்மெண்டையும் முன்னெடுத்து வருகிறார் முருகன். இதனால் பாஜக வீசும் வலையில் இருந்து தங்கள் கட்சி நிர்வாகிகளை பாதுகாத்து வருகிறது திமுக மற்றும் அதிமுக. அடிமட்ட அளவில் பாஜகவின் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் முருகன் மேல்மட்ட அளவிலும் சில நுணுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பக்குவமாக பேசி
அந்த வகையில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை பக்குவமாக பேசி பாஜகவில் இணைத்து விட்டார். ரஜினி அறிவிக்கும் முதல்வர் வேட்பாளர் அண்ணாமலை தான் எனக் கூறப்பட்ட நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளது கவனிக்கத்தக்கது. அண்ணாமலைக்கு மாநில அளவில் மிக முக்கியப் பதவி ஒன்றை விரைவில் அளித்து அவர் மூலம் இளைஞர்களை ஈர்ப்பதற்கான வியூகத்தை வகுத்து வருகிறது பாஜக.
ஆதாயம் யாருக்கு?
கட்சியால் அதில் இணைபவர்களுக்கு ஆதாயம், இணைபவர்களால் கட்சிக்கு ஆதாயம் என்ற இரட்டை பரஸ்பர நிலையை பாஜகவில் காணமுடிகிறது. உதாரணத்திற்கு கூற வேண்டுமென்றால், தொழிலதிபர்களுக்கும், வழக்குகளில் சிக்கியிருப்போருக்கும் கட்சி மூலம் சகாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் மக்கள் அறிந்த முகங்களான நமீதா, ராதாரவி போன்றோர் வரவால் கட்சிக்கு சகாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.