தமிழகத்தில் கட்டிடங்களுக்கு புதிய வழிகாட்டி மதிப்பு.. சென்னைக்கு 20% , நகராட்சிகளுக்கு 5 % உயர்வு
சென்னை : பொதுவாக ஒரு இடத்தை நீங்கள் வாங்கும் போது அந்த இடத்திற்கான நில வழிகாட்டி மதிப்பு தொகைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதே பாணியில் தற்போது புதிய கட்டிடங்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யும் வகையில் புதிய வழிகாடடி மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 20 சதவீதமும் , நகராட்சி பகுதிகளில் கட்டிடங்களுக்கு 5 சதவீதம் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அங்கு பத்திரப் பதிவின்போது கட்டிடங்கள், நிலங்களுக்கு என தனித்தனியாக மதிப்பு நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தான் ஒவ்வொரு இடத்திற்கும் சந்தை விலையை ஒட்டி வழிகாட்டு மதிப்பு உள்ளது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களுக்கு தடை.. தமிழக அரசு அதிரடி!
எவ்வளவு மதிப்பு
அந்த வழிகாட்டு மதிப்பின் படி நிலங்களுக்கு உரிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுகிறது.. இந்நிலையில் கட்டிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த கட்டிடங்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று இருந்தால், சார்பதிவாளர்கள் மூலம் மதிப்பு நிர்ணயம் செய்யப்படும்.
பொதுப்பணித்துறை
அதேநேரம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் அந்த கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். இப்போது கட்டிடங்களின் புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்துள்ளது பொதுப்பணித்துறை. அந்த அறிக்கையை பதிவுத்துறைக்கு அனுப்பி உள்ளது.
கட்டிடம்
சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை கட்டிடம் என வகைப்படுத்தப்பட்டு, அந்த கட்டிடங்களுக்கு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கான்கிரீட்கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் தரை தளம் சதுர மீட்டருக்கு ரூ.9,765, முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.9050, இரண்டாம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.9215, அதற்குமேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.139 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரைதளம்
மெட்ராஸ் டெரர்ஸ் வடிவமைப்பு பழங்காலத்து கட்டிடத்துக்கு தரைதளத்துக்கு சதுர மீட்டர் ரூ.8,930, முதல் தளத்துக்கு ரூ.8,730, 2ம் தளத்திற்கு ரூ.8,515, அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு சதுர மீட்டர் ரூ.139 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சாதாரண ஓட்டு வீடு மற்றும் நாட்டு ஓட்டு வீடுகள் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களுக்கும், மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 சதவீதம் உயர்வு
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிலோ மீட்டருக்கு உள்ள பகுதியில் 20 சதவீதம், கோவை, ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளுக்கு 15 சதவீதமும், திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோயில், ஆவடி மாநகராட்சிகளுக்கு 10 சதவீதமும், அனைத்து நகராட்சிகளுக்கும் 5 சதவீதமும், கொடைக்கானல், ஏற்காடு, நீலகிரி மலைப்பகுதிகளில் 10 சதவீதமும் கடந்தாண்டை காட்டிலும் கூடுதலாக கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
முத்திரை தீர்வை
இந்த புதிய மதிப்பீட்டு அறிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மதிப்பு அதிகரிப்பால் முத்திரை தீர்வை கட்டணமும் உயர்ந்து உள்ளது. இதன்படியே வீடு வாங்கும்போது முத்திரை தீர்வை வசூலிக்கப்படும். இந்த கட்டிட மதிப்பு அறிக்கையை அடிப்படையாக வைத்துதான் அரசு கட்டிடங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.