அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி.. ஒரு இடம்.. இரட்டை இலையில் போட்டி!
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக, திமுகவின் கீழ் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கி உள்ளதுடன், அதன் இறுதி கட்டத்தையும் எட்டி உள்ளன.
இதில் அதிமுக கூட்டணியில், பாமக - பாஜக கட்சிகள் உறுதியான நிலையில், இன்று புதிய நீதி கட்சியும் கூட்டணியில் தன்னை இணைத்து கொண்டுள்ளது.
முடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்!
ஏசி சண்முகம்
பாஜக எங்கு கூட்டணி வைக்கிறதோ அங்கு கட்டாயம் கூட்டணி வைப்பவர் ஏசி சண்முகம். கடந்த முறை 2014 லோக்சபா தேர்தலில்கூட பாஜக கூட்டணியில் இடம் பெற்றது புதிய நீதிக் கட்சி. அதனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளதால், இப்போதும் இதே கூட்டணியில் புதிய நீதி கட்சி இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இரட்டை இலை
இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், "அதிமுக அணியில் புதிய நீதி கட்சிக்கு விரைவில் ஒரு இடம் ஒதுக்கப்படும், அதிமுக சின்னத்தில் நான் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
உடன்பாடு
அதன்படி, அதிமுக தலைமையகத்தில் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏசி சண்முகம் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பிலும் கூட்டணி தொடர்பான உடன்பாடு கையெழுத்தானது.
கையெழுத்தானது
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் ஏ.சி. சண்முகம் - ஓபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டனர். இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.