தமிழக ரவுடிகளுக்கோர் கெட்ட செய்தி.. கடும் சட்டம் வருகிறது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது என்று தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ரவுடிகள் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் அமர்வு, ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற போது போலீஸ் சுப்ரமணியன் மரணமடைந்தார்.
ரவுடிகள் இறக்க நேரிடும் போது காட்டப்படும் அக்கறையை போலீசார் மீது, மனித உரிமை ஆணையம் ஏன் காட்டுவதில்லை என்று கேள்வி எழுப்பினர். ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் ரவுடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட வரைவு மசோதா, குழுவின் மூலம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் புதிய சட்ட வரைவு மசோதா எப்போது சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட உள்ளது என்று பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்
மூடப்பட்ட இடம்.. ஏசியும் போட்டு விடுவாங்க.. இருமினாலே போச்சு.. இன்னும் என்ன விபரீதங்கள் ஏற்படுமோ?