தை 2-ம் நாள் தமிழக அரசு இதை செய்ய வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழுவின் புதிய கோரிக்கை!
சென்னை: ஆண்டுதோறும் தை 2-ம் நாள் கல்லணையில் கரிகாலனுக்கு "நன்றி விழா" நடத்த வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுவினர் புதிய கோரிக்கை வைத்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில், எதிர் நடவடிகைகளைத் தமிழ்நாடு அரசு உரியவாறு எடுக்கவில்லை என விமர்சித்துள்ளனர்.
காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைவர் மணியரசன் தலைமையில் கல்லணையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
கங்குலி, தோனியை விட பெஸ்ட்.. பெரும் கனவுகளை நிஜமாக்கிய கோலி.. திடீர் முடிவிற்கு என்னதான் காரணம்?
2,000 ஆண்டுகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆர்ப்பரித்து வந்த காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையில் அணை கட்டி,பாசனத்திற்கு நீரைப் பயன்படுத்திய பெருவேந்தன் கரிகாலன். தைப் பொங்கல் நாள் அறுவடைத் திருவிழாவாக - கால்நடைத் திருவிழாவாக - தமிழர் மரபு விழாவாக பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் படையல்
அந்நாளில் கல்லணையில் உள்ள கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் படைத்து,மக்களுக்குப் வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வழங்குவதைக் காவிரி உரிமை மீட்புக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறது. யானை மீதமர்ந்திருக்கும் கரிகாலனுக்கு மாலை அணிவித்துப் படையல் போட்ட பின், பழங்காலக் கல்லணையை அடையாளங்காட்டி, அதே இடத்தில் புதிய அணை எழுப்பத் திட்டம் தந்த ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் அவர்கள் சிலைக்கும், காவிரித் தாய் சிலைக்கும், இராசராசன் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்து பொங்கல் படையல் இடப்பட்டது.
பொங்கல் அன்பளிப்பு
தஞ்சை இராமு அடிசில் உணவக உரிமையாளர்களான கைலாசம் - செம்மலர் இணையர் வெண்பொங்கல்,சர்க்கரைப் பொங்கல் அன்பளிப்பாக வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன் பின் வரும் வேண்டுகோள்களை முன்வைத்தார். "தாழ்வு மனப்பான்மையை நீக்கி,தன்னப்பிக்கையையும் தன்மான உணர்வையும் தூக்கிப் பிடிப்பேன் " என்று உறுதி எடுக்க வேண்டும்.
நன்றி விழா
''தமிழ்நாடு அரசு, கரிகால் பெருவளத்தானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழாவில் தை 2-ஆம் நாள் கல்லணையில் கரிகாலன் மணிமண்டபத்தில் "நன்றி விழா" நடத்த வேண்டும். கர்நாடகத்தில் மேக்கே தாட்டில் கர்நாடக அரசு அணைகட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்திய அரசின் நீர்வளத்துறை இவ்வணை கட்ட ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டது. அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கிடும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.''
அரசு மீது விமர்சனம்
''மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டு விட்டால் மிகை வெள்ள நீர் என்று ஒரு சொட்டு கூட மேட்டூர் அணைக்கு வராது. அவ்வாறு வெள்ள நீரையும் தடுக்கும் சூழ்சியுடன்தான் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது. கர்நாடக எதிர்கட்சியான காங்கிரசும் மேக்கே தாட்டு அணையை உடனே கட்டி முடிக்க வேண்டும் என்று போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. கர்நாடகத்தின் இம்முயற்சிகளைத் தடுக்கும் நோக்கத்தில், எதிர் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உரியவாறு எடுக்கவில்லை.''