அதிமுக ஐடி விங் 5 மண்டலமாக பிரிப்பு -2021 சட்டசபை தேர்தலுக்காக விறுவிறுப்பாக தயாராகும் ஈபிஎஸ்,ஓபிஎஸ்
அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியின் கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டுள்ளது தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து அதற்கு தனித்தனி மண்டல நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள்.
சென்னை: அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தலைநகர் சென்னையில் தொடங்கி மாநகரங்களிலும், நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து வரை அதிமுகவினரை மட்டுமல்லாது அனைத்து தரப்பு பொதுமக்களையும் நெருங்க தயாராகி வருகிறது அதிமுக ஐடி அணி.
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கால கட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி தேர்தலுக்கு தயாராகி வருகிறது அதிமுக. 2011ஆம் ஆண்டு முதல் பத்தாண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் அதிமுக ஆட்சியை தக்க வைக்க புதுப்பாய்ச்சலுடன் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறது. தகவல் தொழில் நுட்ப அணிக்கு நகர்புறங்களில் தொடங்கி கிராம பஞ்சாயத்து வரை நிர்வாகிகள் நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்டமாக மண்டல அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவின் சென்னை மண்டலத்திற்கு செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மண்டலத்திற்கு எம். கோவை சத்யன், கோவை மண்டலத்திற்கு சிங்கை ஜி. ராமச்சந்திரன், திருச்சி மண்டலத்திற்கு பி. வினுபாலன், மதுரை மண்டலத்திற்கு விவிஆர் ராஜ் சத்யன் ஆகியோர் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றனர்.
இலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தகவல் தொழில்நுட்ப அணி
ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தவரைக்கும் அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி சுறுசுறுப்பாக செயல்பட்டது. 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபைத் தேர்தலில் ஐடி அணியின் திறமை பளிச்சிட்டது. ஜெயலலிதா குரலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தகவல் தொழில் நுட்ப அணிதான் முக்கிய பங்காற்றியது.
கட்சியில் பிளவு
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவு, மாற்றங்களினால் ஐடி அணியில் இருந்தவர்கள் பல திசைகளில் பிரிந்தனர். ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் வசைப்பாடிக்கொள்ள அதை திமுக பயன்படுத்திக்கொண்டது. கட்சி மீண்டும் இணையமும் மீண்டும் தகவல் தொழில்நுட்ப அணி கட்டமைக்கப்பட்டது.
சோபிக்காமல் போன ஐடி அணி
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக ஐடி அணி சரியாக செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து தகவல் தொழில்நுட்ப அணியை மாற்றியமைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. இதனையடுத்து நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
அதிமுக ஐடி அணி 5 மண்டலம்
இந்த நிலையில் அதிமுக ஐடி அணி தற்போது 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவின் சென்னை மண்டலத்திற்கு செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மண்டலத்திற்கு எம். கோவை சத்யன், கோவை மண்டலத்திற்கு சிங்கை ஜி. ராமச்சந்திரன், திருச்சி மண்டலத்திற்கு பி. வினுபாலன், மதுரை மண்டலத்திற்கு விவிஆர் ராஜ் சத்யன் ஆகியோர் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகள் நியமனம்
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதி அளவில் நிர்வாகிகளும், மாநகராட்சி வட்டம், நகர வார்டுகள், ஊராட்சிகளுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதற்கட்டமாக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகத்தை வலுவாக கட்டமைத்து வருகிறது அதிமுக.
ஈபிஎஸ், ஓபிஎஸ்
கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா நிவாரண பணிகள் மூலம் மக்களைக் கவர்ந்து வாக்குகளாக மாற்ற ஆளும் கட்சியினரும் அமைச்சர்களும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ளனர். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முழு முனைப்போடு ஈபிஎஸ். ஓபிஎஸ் இருவரும் தயாராகி வருகின்றனர்