பாஜகவுக்காக புதிய தொலைக்காட்சி சேனல்... அதிரடி வியூகங்கள் வகுக்கும் எல்.முருகன்..!
சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்காக தனி தொலைக்காட்சி சேனல் ஒன்றை தொடங்கும் திட்டத்தில் இருக்கிறது அக்கட்சியின் மாநில தலைமை.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சியையும் மக்களையும் இணைக்கும் இணைப்பு பாலமாக தொலைக்காட்சி சேனல் திகழ வேண்டும் என்பது எல்.முருகனின் எதிர்பார்ப்பு.
பாஜக ஆதரவு பிரமுகர் ஒருவரால் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் தொலைக்காட்சியை பெரியளவில் எடுத்துச்செல்வது பற்றிய ஆலோசனை கமலாலயத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
கன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்
தொலைக்காட்சி சேனல்
தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் என ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. ஆனால் பாஜகவுக்கு என தனி தொலைக்காட்சி சேனல் இல்லை. கோவையை தலைமையிடமாக கொண்டு நடத்தப்பட்டு வரும் பாஜக ஆதரவு செய்தி தொலைக்காட்சியானது மக்கள் மத்தியில் பெரியளவில் சென்றுசேரவில்லை.
புதிய தொலைக்காட்சி
சிறிய தொலைக்காட்சி நிறுவனங்கள் என்றாலும் வசந்த் டிவி மற்றும் மெகா டிவி ஓரளவு மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்றிருக்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் தொடர்பான நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், மற்றும் செய்திகள் ஒளிப்பரப்பப்படுகின்றன. இந்நிலையில் பாஜகவுக்காக புதிய தொலைக்காட்சி தொடங்குவதா அல்லது கோவையில் இயங்கி வரும் செய்தி தொலைக்காட்சி ஒன்றை பெரியளவில் வளர்த்தெடுப்பதா என்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது.
தேர்தல் பரப்புரை
சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் மேற்கொள்ளும் பரப்புரையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் வகையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதற்கான முழுப் பணியையும் பாஜக தகவல்தொழில் நுட்ப அணி முன்னின்று மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு மேல் வழக்கு
இதனிடையே அண்மையில் பாஜகவில் இணைந்த திருச்சி பிரமுகர் ஒருவர், தமது தொலைக்காட்சி சேனலை கட்சிக்காக அர்ப்பணிக்க தயார் என தலைமையை மகிழ்ச்சிப்படுத்தி இருந்தார். ஆனால் அவர் மீது வழக்கு மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதால் அவரை சற்று ஒதுக்கி வைத்து வருகிறார் எல்.முருகன். எது எப்படியோ சட்டமன்றத் தேர்தலுக்குள் தாமரை சின்னத்துக்காக புதிய தொலைக்காட்சி தொடங்கப்படுவது உறுதி என்கின்றனர் கமலாலயம் வட்டாரத்தினர்.