சென்னை, கோவையில் புதிய டைடல் பார்க்குகள்... அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் தொழில் நகரான கோவையில் புதிய டைடல் பார்க்குகள் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
அதே போல், கோவை மாவட்டம் சூலூரில், 300 ஏக்கரில் தளவாட தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சிங்காநல்லுார் தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திக், கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் புதிய தொழில்நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், சிங்காநல்லூர் தொகுதியில் சிட்கோ நிறுவனம் சார்பில் ஏற்கனவே 9.14 லட்சம் சதுர பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு, அதில் 12 ஆயிரத்து 500 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், புதிய தொழில் பூங்கா அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சூலூர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
மேலும், சென்னையில் ஏற்கனவே இருக்கக்கூடிய டைடல் பார்க் அருகே, 5 லட்சம் சதுர அடியில் 8 மாடி கட்டடம் கொண்ட புதிய டைடல் பார்க் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.