தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவியேற்றார்
சென்னை; தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் இன்று பிற்பகல் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு அதிகாரிகள் பிரிவு உபாசார விழா நடத்தி வழி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகத்தை ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் ஆளுநர் மாளிகையோ ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.-ஐ தலைமை செயலாளராக நியமிக்க தீவிரம்காட்டியது.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு காட்டியது. இதனால் புதிய தலைமை செயலாளர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நிதித்துறை செயலாளர் சண்முகத்தையே தலைமை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், 1985-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.
2010-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் சண்முகம். கடந்த 9 ஆண்டுகாலம் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் தற்போது தலைமைச் செயலாளராகி உள்ளார்.
இன்று பிற்பகல் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.