புத்தாண்டு 2020: அதிகாலை 1 மணிவரை மெட்ரோ ரயில் ஓடும்.. 15,000 போலீஸ் பாதுகாப்பு.. களை கட்டும் சென்னை
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமையான நாளை அதிகாலை 1 மணிவரை சென்னையில், மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையில் 2020 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால், நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால், பயணிகளுக்கு வசதியாக, செவ்வாய்க்கிழமை மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படுகிறது. இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவைக் கொண்டாடுவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு, காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில் ஆயிரகணக்கான மக்கள் கூடுவார்கள்.
நெல்லை கண்ணன் ஷாக் பேச்சு.. களமிறங்கும் தமிழக பாஜக.. விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்
விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்ய வேண்டும் என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது. எனவே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, வாலாஜா சாலை, காந்தி சிலை, அடையார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை முழுவதும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். நாளை இரவு 9 மணியில் இருந்து சென்னையில் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, தி.நகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட 368 இடங்களில் வாகனதணிக்கை குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. மெரினா, காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன் மூலம், அங்குள்ள கூட்டம் கண்காணிக்கப்பட உள்ளதாம்.