நியூசிலாந்து மசூதி தாக்குதல்… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை: நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தொழுகைக்காக மசூதியில் இருந்த அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கொடூரமானது;மனித குலத்துக்கு எதிரானது;வன்மையாக கண்டிக்கதக்கது.
அப்பாவி மக்களை குறிவைத்து இதுபோன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு மதம் என்பதே கிடையாது. இது போன்ற காட்டுமிராண்டிகள் உருவாக காரணம் ஒரு சாரார் மீது திட்டமிட்டு பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவே என்பதை உலக சமூகம் உணர வேண்டிய தருணம் இது.
பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வேரோடு அழிக்க பாடுபடுவோம்.கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.