சேனலைப் போட்டா.. "நேஷன் வான்ட்ஸ் டு நோ".. நொய் நொய்ன்னு ஒரே சவுண்டப்பா!
சென்னை: முன்னாடி காலத்தில் எல்லாம் தூர்தர்ஷன் தூர்தர்ஷன்னு (ஒரு டிவி தாங்க) ஒரே ஒரு சானல் மட்டும்தான் இருந்தது. அதில் செய்தி வரும் பாருங்க.. அப்படியே தாலாட்டு பாடுவது போல இருக்கும்.. நிதானமா, ஜாலியா, முகத்தில் எக்ஸிபிரஷனே இல்லாமல் வாசிப்பார்கள்.
அரை மணி நேரம்தான் செய்தி போகும்.. ஆனால் அரை நாளுக்கான எபக்ட்டை அதில் கொடுத்து முடித்து விடுவார்கள். அப்படித்தான் இருந்தது அந்தக் காலத்து செய்திகள். " அந்தக் காலம் அது அது வசந்த் அன் கோ காலம்" என்று பாட்டே பாடலாம்.. இப்போதும் கூட தூர்தர்ஷன் செய்திகள் இதே பாணியில்தான் உள்ளன. பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை.
ஷோபனா ரவி வருவார்.. முகத்தில் அசைவே இருக்காது.. ஆனாலும் மாய்ந்து மாய்ந்து பார்ப்பார்கள். உச்சரிப்புக்கென்றே ஒரு கூட்டம் மாய்ந்து மாய்ந்து பார்க்கும். சந்தியா ராஜகோபால் இருந்தார். பின்னர் பாத்திமா பாபு வந்தார்.. இப்படி நிறையப் பேர். இவர்களுக்கு ரசிகர் மன்றம் அமைக்காத குறையாக ஒவ்வொருவரும் ரசித்துப் பார்த்தனர். செய்திகளையும் லயித்துப் போய் கேட்டனர்.
தனியார் சானல்கள்
ஆனால் பாருங்க இந்த தனியார் சானல்கள் வந்தாலும் வந்தன.. காதுகளைக் கிழிக்க ஆரம்பித்து விட்டனர். அதிலும் ஆங்கில சானல்களை மறந்தும் கூட போட்டு விடக் கூடாது. கத்திக் கத்தியே காது ஜவ்வு அந்து போய் விடும் போல. அப்படி ஒரு கத்து கத்துகின்றனர். ஏன்டா இப்படி கத்தறீங்கன்னு நாம கத்திக் கேட்டாலும்.. அது அவர்களது காதுகளுக்கு எட்டாது என்பதால்.. அந்த சத்தமும் வீணாகிப் போய் விடுகிறது.
மறைமுக டார்ச்சர்
நூற்றுக்கணக்கான செய்தி சானல்கள் இன்று உள்ளன. ஒவ்வொரு டிவியும் செய்திகளுக்கென்று தனியாக சேனல் வைத்துள்ளன. இதில் விடிய விடிய செய்திகளை போட்டுக் கொண்டே போகிறார்கள். ஒரு வேளை செய்தி கிடைக்காவிட்டால் போட்ட செய்திகளையே திரும்பத் திரும்பக் காட்டி நம்மை மனப்பாடம் செஞ்சுக்கோங்கடான்னு மறைமுகமாக டார்ச்சர் செய்கிறார்கள்.
ஏகப்பட்ட பிழைகள்
தமிழில் மட்டும் ஏகப்பட்ட சானல்கள் இப்போது செய்திக்காகவே வந்து விட்டன. ஒவ்வொரு சானலும் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளைக் காட்டுகின்றன. ஒரு சானலில் வரும் செய்தியின் தொடர்ச்சியை அடுத்த சானலில் பார்க்கலாம் போல. அப்படி ஒரு போட்டா போட்டி வேற. இதில் முந்தித் தருகிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை பார்க்கலாம். அதை விட கொடுமை உயிரோடு உள்ள பலரை போட்டி போட்டுக் கொண்டு காலி செய்த பெருமையும் செய்தி சானல்களுக்கே உண்டு.
பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் என்று ஒரு அக்கப் போர் உண்டு. இதை விட பெரிய காமெடி எதுவுமே கிடையாது. டிராபிக் ராமசாமி பேட்டி கொடுத்தாலும் அது பிரேக்கிங்தான்.. ரஜினிகாந்த் பேட்டி கொடுத்தாலும் பிரேக்கிங்தான். அதை விட முக்கியமானது என்ன நடந்தாலும் உடனே செவப்பு கலரில் பிரேக்கிங் போட்டு அதுக்கு தனியாக மியூசிக்கும் போடுவாங்க பாருங்க.. நமக்கு இங்க பிச்சுக்கும். இப்ப பிக் பிரேக்கிங் வேற வந்துச்சாங்கோ!
அறிவு வளர்லையே
ஒரே ஒரே செய்தி சானலை மட்டும் வைத்துக் கொண்டு நமது காலத்தில் ரொம்ப ஹேப்பியாகத்தான் நாட்டு நடப்புகளை கேட்டுத் தெரிந்து கொண்டு கூடவே அறிவையும் வளர்த்தோம். ஆனால் இன்றோ நூற்றுக்கணக்கான செய்தி சேனல்கள் உள்ளன. எல்லாவற்றிலும் கூடுதல் செய்திகள் வரத்தான் செய்கின்றன. ஆனாலும் நமக்கு அறிவு வளர மாட்டேங்குதே.. என்ன காரணமாக இருக்கும்.. நீங்களும் சிந்திச்சுச் சொல்லுங்க மக்களே.