அதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
சென்னை: நாடு முழுவதிலும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் திருவிழா இன்று மாலையுடன் ஓய்ந்துள்ளது. நியூஸ் எக்ஸ் தமிழகத்தில் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் திமுக அலையே வீசுவதாக கூறப்பட்டுள்ளது
தேசியளவிலும் மாநில அளவிலும் எந்தெந்த கட்சிகள் அதிக அளவிலான தொகுதிகளை பெற போகிறது என்ற எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி அரசியல் கட்சிகளை பரபரக்க வைத்துள்ளது,. எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ள பெரும்பாலான ஊடகங்கள், தேசிய அளவில் பாரதிய ஜனதாவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என கருத்து கணிப்புகளில் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்திலும் எந்த கட்சி அதிக மக்களவை தொகுதிகளை பெற போகிறது என்ற கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி 38 தொகுதிகளுக்கு மகக்ளவை தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தமிழகத்தில் திமுக விஸ்வரூபம்.. 38 இடங்களை வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் எக்ஸிட் போல்!
திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி என இந்த தேர்தலில் தமிழகத்தில் எது அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நியூஸ் எக்ஸ் ஊடகம் தமிழகத்தில் தான் நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் திமுக அலை வீசுவதாக நியூஸ் எக்ஸ் கணித்துள்ளது. குறைந்தது 34 மக்களவை தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே சமயம் அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமலும் போகலாம், அல்லது அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை தான் கிடைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணிக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என இந்த எக்ஸிட் போல் முடிவு மூலம் நியூஸ் எக்ஸ் கூறியுள்ளது