"அவர்"தான் காரணமா.. "லூசுப்பசங்களா".. பரபரப்பாக்கிய குஷ்புவின் பாஜக பிரவேசம்.. நியூஸ்மேக்கர் 2020
இந்த வருடம் தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தியவர் குஷ்பு
சென்னை: ஜெ.வின் அபிமானியாக இருந்து, திமுகவில் சேர்ந்து, பிறகு காங்கிரசில் இணைந்து, இறுதியில் பாஜகவில் தஞ்சம் அடைந்துள்ள குஷ்பு, இந்த வருடம் நியூஸ்மேக்கர் என்ற அடைமொழியை பெற்றுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்புகூட, பாஜகவில் சேரப் போகிறீர்களா.. என்று பல்வேறு தரப்பினரும் விதம் விதமான கேள்விகளால் குஷ்புவிடம் கேட்டு வந்தனர்.
ஆனால் எல்லாவற்றையும் திட்டவட்டமாக மறுத்தார் குஷ்பு.. உங்களுக்கெல்லாம் மன நலம் பாதிச்சிருச்சா என்றெல்லாம் கூட காட்டமாக கேட்டு பதிலளித்து வந்தார்.
அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த மமதா...பாஜக எம்பி செளமித்ரா கான் மனைவி திரிணாமுல் காங்.-ல் ஐக்கியம்
மறுப்பு
ஆனால் ஜம்மென்று போய் பாஜகவில் சேர்ந்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.. பாஜகவை மிக மிக கடுமையாக விமர்சித்து வந்தவர், காரசார ட்வீட் போட்டு வந்தவர், துணிச்சலாக திட்டி பேட்டி தந்தவர், அந்த கட்சியில் சேர போவதில்லை என்று மறுத்து வந்தவர், திடுதிப்பென சேர்ந்ததுதான் தமிழக மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன்னுடைய ஒரு ட்வீட்டில்கூட, "லூசுப் பசங்களா.. சொல்ல வந்தது புரியுது இல்ல.. அப்புறம் என்னடா" என்று காட்டமாக கேட்டுவிட்டு , திடீரென கட்சி தாவலில் ஈடுபட்டார்.
பாஜக
இதற்கு சில காரணங்களும் சொல்லப்பட்டது.. அரசியலில் இத்தனை வருஷமாக இருக்கும் தன்னை எந்த கட்சியும் பயன்படுத்தி கொள்ளாத நிலையில், நட்டாவிடம் ஏதாவது முக்கிய பொறுப்பினை கேட்கலாம் என்றும், அல்லது வரப்போகிற தேர்தலில் சீட் கேட்கலாம் என்றும் அனுமானிக்கப்பட்டது. அதற்காக, சுந்தர்.சி தமிழக பாஜக தலைவர் எல். முருகனை ரகசியமாக சந்தித்து பேசிவிட்டு வந்ததாகவும் செய்திகள் கசிந்தன. அதாவது, குஷ்புவை பாஜகவில் இணைய கட்டாயப்படுத்தியதே சுந்தர் சிதான் என்று முணுமுணுக்கப்பட்டன.
சுந்தர் சி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித்தொடர்பாளருமான கோபண்ணா, "சுந்தர் சி.தான் குஷ்பூவை பாஜகவில் இணைய வைத்திருக்கிறார்... சொல்லபோனால், அவரது அழுத்தத்தின் பேரிலேயே குஷ்பு பாஜகவில் இணைய முடிவெடுத்திருக்கக் கூடும்" என்று ஒரு விளக்கம் சொல்லி இருந்தாரே தவிர, குஷ்புவை சமாதானப்படுத்த காங்கிரஸ் தரப்பு முயற்சித்ததாக தெரியவில்லை. போனால் போகட்டும் என்ற அலட்சிய மனோபாவம்தான் காங்கிரஸ் தரப்பில் இருந்தது.
பாஜக
குஷ்புவை பொறுத்தவரை ரொம்பவும் தைரியசாலி.. யாராக இருந்தாலும் நேருக்குநேர் பேசிவிடுவார்.. தேர்தல் வரும் சமயத்தில் குஷ்புவை காங்கிரஸ் நழுவவிட வைத்துவிட்டதோ என்றே தோன்றுகிறது. திருமாவை கண்டித்து போராட்டம் நடத்தியது முதல், தன்னால் முடிந்த பணியை பாஜக சார்பாக குஷ்பு செய்து கொண்டுதான் இருக்கிறார்.. இருந்தாலும், குஷ்புக்கு பாஜக இதுவரை எந்த பெரிய பொறுப்பும் தந்ததாக தெரியவில்லை.
அண்ணாமலை
அவ்வளவு ஏன், அண்ணாமலைக்கு தந்த மிக முக்கிய பொறுப்புகூட குஷ்புவுக்கு தரப்படவில்லை.. இத்தனைக்கும் அண்ணாமலையை விட குஷ்பு சீனியர்.. அண்ணாமலையைவிட வயதில் பெரியவர்.. அண்ணாமலையைவிட துணிச்சலும், தைரியமும் நிறைந்தவர்.. அண்ணாமலையை விட அறிவு, ஞானம் மிக்கவர்.. அண்ணாமலையை விட திராவிட அரசியலை நுணுக்கமாக கவனித்து உடனிருந்து பயணித்தவர். அப்படி இருக்கும்போது, குஷ்புக்கு இப்போதுவரை பதவி தராதது ஆச்சரியமாக உள்ளது.
நியூஸ்மேக்கர்
ஒருவேளை வரப்போகும் தேர்தலில் குஷ்புவுக்கு ஏதாவது முக்கிய பொறுப்பு தரப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.. எனினும், இந்த வருடம் மிகப்பெரிய பரபரப்பை அரசியலில் ஏற்படுத்தி, தமிழக பாஜக - காங்கிரஸ் என்ற 2 கட்சிகளிலும் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியவரில் மிக முக்கிய இடத்தை குஷ்பு பெறுகிறார்.