கன்னத்தை கிள்ளி.. "வருங்கால முதல்வர்".. சிலாகிக்கும் திமுக.. 2020ஐ வசீகரித்த உதயநிதி!
இந்த வருடம் நியூஸ் மேக்கராகவே உயர்ந்து காணப்படுகிறார் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: இந்த வருடம், திடீரென கிளம்பி உள்ள திமுகவின் இளைஞர் படை, உதயநிதியின் பின்னால் அணிவகுத்து பட்டையை கிளப்பி வருகிறது.. எத்தனையோ விமர்சனங்களை தாண்டி, இன்று ரஜினிக்கு நிகராக, ஏன் அவரை விட செல்வாக்கு மிக்கவராகவே வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.. "வருங்கால முதல்வர்" என்ற அளவுக்குக் கூட அவரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டனர் உடன்பிறப்புகள்.. இப்படி ஒரு விஸ்வரூப வளர்ச்சியை இந்த வருடம் ஏற்படுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
வாரிசு அரசியல் என்ற அடைமொழிக்குள்தான் இப்போது வரை உதயநிதி பார்க்கப்பட்டு வருகிறார்.. சீனியர்களின் அதிருப்தியை வந்த வேகத்திலேயே சம்பாதித்துவிட்டவர் என்ற பெயரையும் தக்க வைத்துள்ளார்.. யாரையும் ஆலோசிக்காமல் தன்னிஷ்டத்துக்கு மீடியாவில் பேட்டி தருகிறார் என்ற விமர்சனத்தையும் குறுகிய காலத்தில் பெற்றுவிட்டவர்.. குக செல்வம் முதல் திமுகவில் இருந்து வெளியேறியவர்கள் பிரதானமாக முன்வைத்த புகார் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவத்தை பற்றியதுதான்.
ஆக, எல்லா பக்கமும் நெருக்கடியும், புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தாலும், இவைகளுக்கு நடுவில்தான் உதயநிதியின் அரசியல் பயணம் ஆரம்பமானது.. எதை பற்றியும் உதயநிதி கவலையே படவில்லை.. முக்கியமாக, யாருடைய குற்றச்சாட்டுக்கும் பெரிய அளவிலான பதிலடியை தராமல், தன் வேலையில் கவனமாக இருக்க ஆரம்பித்தார்.
கடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி!
இளைஞர் அணி
திமுகவின் இளைஞரணியை மிக வேகமாக செயல்படுத்தினார்.. சரியாக வேலை பார்க்காத நிர்வாகிகளை களை எடுத்தார்.. மாற்றங்களை கொண்டு வந்தார்.. அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.. இன்று வலுவான ஒரு இடத்தில் இளைஞர் அணி சக்தியாக உருவெடுத்துள்ளது.. அதனால்தான், திமுக தலைமை செய்யும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தைகூட, இந்த வருடம் உதயநிதியே பெரும்பாலும் கையில் எடுத்தார்.. ஒவ்வொரு போராட்டத்திலும் உதயநிதியின் பேச்சு முக்கியத்துவம் பெறப்பட்டது.. பிரதமர் முதல் முதல்வர் வரை உதயநிதி சரிசமமாக அனைவரையுமே விளாசி தள்ளினார்.
கேள்விகள்
இவரது சரவெடி கேள்விகளை கேட்க, நள்ளிரவு என்றும் பாராமல் மக்கள் கூடினர்... காத்திருந்து அவர் பேச்சை கேட்டனர்.. பொதுமக்கள் உதயநிதிக்கு வரவேற்பு தரும்போதெல்லாம், ஏதோ தங்கள் வீட்டு பிள்ளை வந்துவிட்டதாகவே நினைத்து, அவரை அரவணைத்தனர்.. சில வயதான பெண்கள் அவரது கன்னத்தை தொட்டுப்பார்த்து ஆசியும் வழங்கினர்.
ஆர்ப்பாட்டம்
மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டமாகட்டும், கோவையில் இளைஞர் அணியினரை போலீசார் கைது செய்ததை கண்டித்து நடத்திய போராட்டம் ஆகட்டும் அதிமுகவை திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.. இது போதாமல், இப்போது தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.. உதயநிதி எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் கூட்டம் கூடுகிறது.. இது யாரும் எதிர்பாராத ஒன்று.
பிரச்சாரம்
ஒரு நடிகருக்காக கூடும் கூட்டம் போல இது தெரியவில்லை.. நடுராத்திரி ஒரு ஊருக்கு பிரச்சாரம் செய்ய போனாலும், அங்கேயும் தொண்டர்கள் குவிந்து விடுகிறார்களாம்.. பாஜகவின் முருகன் நடத்தும் வேல் யாத்திரையைவிட, பல மடங்கு அதிகமாக உதயநிதிக்கு கூட்டம் கூடுகிறது.. தன் மீதான வசவுகளையும், விமர்சனங்களையும் கேலி கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் இன்று ரஜினிக்கு நிகராக, அவரை விட செல்வாக்கு மிக்கவராக வலம் வருகிறார் உதயநிதி.. அதாவது, எதெல்லாம் அன்று மைனஸாக சொல்லப்பட்டதோ, அவ்வளவையும் தன் விடா முயற்சியால் இன்று பிளஸ் ஆக்கி கொண்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!