சவுக்கு சங்கரை பார்க்க ஒரு மாதம் தடை.. காரணம் இதுதான்.. கடலூர் சிறை நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத தண்டனையாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் பார்க்க இன்று முதல் ஒரு மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். 2008ல் அரசு உயரதிகாரிகள் பேசிய டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் சவுக்கு சங்கர் என்ற பெயரில் அரசியல் விவகாரங்கள் பற்றியும், சமூக பிரச்சனைகள் பற்றியும் யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார். மேலும் இணையதளங்களிலும் எழுதி வந்தார்.
அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க
அவமதிப்பு வழக்கு
இந்நிலையில் தான் அவர் நீதிமன்றம், நீதிபதிகள் பற்றி விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவு செய்தது. அதன் பின்பும் சவுக்கு சங்கர் தொடர்ந்து விமர்சனம் செய்தார். இதையடுத்து கிரிமினல் அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
6 மாத சிறை தண்டனை
இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த உத்தரவு செப்டம்பர் 15ல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதிக பார்வையாளர்கள் வருகை
கடலூர் மத்திய சிறயைில் செப்டம்பர் 16ம் தேதி முதல் சவுக்கு சங்கர் உள்ளார். அன்றைய தினம் முதல் அவரை ஏராளமானவர்கள் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் செவ்வாய், வியான் கிழமைகளில் பார்வையாளர்கள் சவுக்கு சங்கரை பார்க்கலாம் என்ற நிலையில் 4 நாட்களில் மட்டும் 25 பேர் வரை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சவுக்கு சங்கரை பார்க்க தடை
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது கடலூர் மத்திய சிறை நிர்வாகம் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறையில் சவுக்கு சங்கரை, பார்வையாளர்கள் சந்திக்க இன்று முதல் ஒரு மாதத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கடலூர் மத்திய சிறை நிர்வாகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.