29ம் தேதி உருவாகிறது புயல்.. சென்னை - நாகை இடையே கடக்கலாம்.. கடலோர மாவட்டங்களில் 'கன மழை' உறுதி
Recommended Video
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி புயல் சின்னம் உருவாக உள்ளது. இந்த புயல் வரும் 29ம் தேதி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் தெரிவித்தார்.
கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வருகிறது. எனினும் தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி புயல் சின்னம் உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் அடுத்த வாரம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம்... வீராணம் ஏரி நீரை 70% பயன்படுத்த திட்டம்
காற்றழுத்த தாழ்வு
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வரும் 25ம் தேதி இந்திய பெருங்கடல், மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
தமிழகம் வருகிறது
இது மேலும் வலுவடைந்து 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அதனை தொடர்ந்து இரண்டு நாட்களில், தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, 29ம் தேதி புயலாக வலுவடையும். இதன்காரணமாக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை- நாகை இடையே
இந்தப் புயலானது சென்னை - நாகை மாவட்டங்களுக்கு இடையே கரையைக் கடக்கலாம் என்றும் புவியரசன் கூறியுள்ளார். ஏற்கனவே கஜா புயலால் காவிரி மாவட்டங்ள் பெரும் சீரழிவைச் சந்தித்தன. இந்த நிலையில் இன்னொரு புயல் வரவிருப்பது அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனத்தின் காரணமாக மிதமானது முதல் கனமழை வரை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 6 செ.மீ, திருவண்ணாமலை 5 செ.மீ, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மிதமான மழை
அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழகத்தில் குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு கூறினார்.