அடையாறு, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை... அரசுக்கு அபராதம் போட்ட பசுமை தீர்ப்பாயம்!
சென்னை : சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்த தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 2 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் இந்த ஆறுகள் மாசுபடுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் எந்த அளவிற்கு மழை பெய்தாலும் அரசு முன்எச்சரிக்கையோடு தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். ஆனால் அடையாறு, கூவம் ஆற்றில் என்ன முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அரசை கேள்விகளால் கிழித்து தொங்கபோட்டுள்ளது.
சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுவது வழக்கம். மழைக்காலங்களில் அதிக அளவில் பாதிப்பை சந்திப்பது இந்த ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிப்பவர்களே. இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
டியர் அமித் ஷா.. உங்க பெயரே நம்மூர் பெயர் இல்ல.. அதை முதல்ல மாத்துங்க.. வரலாற்று ஆய்வாளர் கிண்டல்!
முன்னேற்பாடுகள் செய்யவில்லை
அப்போது அடையாறு கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். வடகிழக்குப் பருவமழைக்கு ஏற்ற முன்ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவில்லை என்றும் நீதிபதிகள் சாடினர். இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.
தலைமைச் செயலாளர் தலையிட வேண்டும்
உடனடியாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் மனதில் வைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேதனை தெரிவித்த நீதிபதிகள்
அடையாறு கூவம் ஆற்றுப் பிரச்னைகளில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்வது மேம்போக்குத் தனமான குற்றச்சாட்டு என்று தலைமைச் செயலாளர் அளித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பக்கிங்ஹம் கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜவர்லால் தேசிய நகர்ப்புற திட்டத்தின் கீழ் வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அரசு அலட்சியம்
சுமார் 26,300 ஆக்கிரமிப்புகள் ஒரே நேரத்தில் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் 408 பேர் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 25,892 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இன்னும் அகற்றப்படவில்லை என்பது இன்னும் வேதனையான விஷயம் என சுட்டிக்காட்டினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை அரசு காரணமாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலும் அலட்சியமானதாகவே இருக்கிறது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து எத்தனை பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர், அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ற விவரம் கூட இல்லையே என்றும் நீதிபதிகள் கடுமையாக சாடியுள்ளனர்.