தமிழகத்தில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்
சென்னை: புதிய தீவிரவாத குழு துவங்கி தமிழகத்தில் நாச வேலைகளை நிகழ்த்த சதி செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 14 பேரின் வீட்டிலிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள், கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு நாடுகளில் செயல்படும் 'அன்சருல்லா' என்ற அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 14 பேரை, அந்நாடு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது. அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என நாகப்பட்டினத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்ததும் துபாய் போலீசாருக்கு தெரிய வந்தது.
அதன்படி 14 பேரும் தற்கொலை படையாக மாற திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. அவர்களை டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். துபாய் போலீசாரின் தகவலின் படி 14 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னை மற்றும் நாகையில் விசாரணை நடத்தி மேலும் இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைதானவர்கள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். 8 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுஇந்நிலையில் முதல் நாளிலேயே கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிரடி ரெய்டை இன்று நடத்தியுள்ளது.
இந்நிலையில், அவர்களின் வீடுகளில் இன்றுஅதிகாலை முதல் சோதனை நடைபெற்றது. கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளில் இன்று சோதனை நடைபெற்றது. நெல்லை மேலப்பாளையத்தில் முகம்மது இப்ராஹீம் என்பவரது வீட்டிலும் மதுரையை சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் கொத்தவால்சாவடியைச் சேர்ந்த தவ்ஃபிக் முகமது என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இதில் கீழக்கரையை சேர்ந்த ரபி அகமதுவின் வீடு நீச்சல் குளத்துடன் ஆடம்பரமாக உள்ளது
அதே நேரத்தில் ராமநாதபுரம் வாலிநோக்கத்தை சேர்ந்த பரூக் வீடு, ஏழ்மையில் உள்ளது. என்ஐஏ நடத்திய அதிரடி சோதனையில் லேப்டாப், பிரிண்டர், சிம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள், பாஸ்போர்ட்டுகள், கணினி பதிவுகள் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.