ஐ.எஸ். தொடர்பு வழக்குகள்: கர்நாடகா, தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
சென்னை: ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தொடர்பான வழக்குகளில் கர்நாடகா, தமிழகத்தில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் ஜனவரி 8-ந் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை, சேலம், கடலூர் மற்றும் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் ராஜேஷ் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை விவரங்கள் பின்னர் தெரிய வரும்.
20 இடங்களில் சோதனை
இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்பான வழக்குகளில் கர்நாடகா, தமிழகத்தில் மொத்தம் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.