சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம்,தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை! பரபரப்பு!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
'அன்சருல்லா' என்ற அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 14 பேரை டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர்.
அவர்கள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். துபாய் போலீசாரின் தகவலின் படி 14 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என நாகப்பட்டினத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்ததும் துபாய் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்படி 14 பேரும் தற்கொலை படையாக மாற திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில், அவர்களின் வீடுகளில் இன்றுஅதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளில் இன்று சோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தில் முகம்மது இப்ராஹீம் என்பவரது வீட்டிலும் மதுரையை சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கொத்தவால்சாவடியைச் சேர்ந்த தவ்ஃபிக் முகமது என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.