இந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும்... நிர்வாகிகள் போர்க்கொடி
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மாற்றாக தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
முஸ்லீம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை போக்க வேண்டுமானால் நலிவடைந்த இஸ்லாமிய கட்சிகள் கலைக்கப்பட்டு ஒரே அமைப்பாக திரள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப்பொதுச்செயலாளர் நிஜாமுதீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு கட்சியையும் கலைக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
மாற்றுக்கட்சி
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதை தடுக்க தவறிவிட்டதால், அந்தக் கட்சியுடன் முஸ்லீம் லீக் கூட்டணி அமைக்கக் கூடாது என சுலைமான் சேட் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதனை ஏற்காமல் காங்கிரஸுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி அமைத்தது. இதனால் வெகுண்டெழுந்த சுலைமான் சேட் சாஹிபு இந்திய தேசிய லீக் என்ற கட்சியை 1996-ல் தொடங்கினார்.
எம்.எல்.ஏக்கள்
இந்திய தேசிய லீக் தொடங்கப்பட்ட போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மாற்றுக்கட்சியாக திகழ்ந்தது. இதனால் ஏராளமான நிர்வாகிகள் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து வெளியேறி இந்திய தேசிய லீக் கட்சியில் இணைந்தனர். அதன் எதிரொலியாக கேரளா, தமிழகம், கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை எல்லாம் பெற்றது.
தேக்க நிலை
ஆனால் கால ஓட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் செயல்பாடுகளிலும் அதன் தலைமையின் நடவடிக்கைகளிலும் தேக்க நிலை உண்டானது. இது கட்சியின் வளர்ச்சியை அதலபாதாளத்தில் வீழ்த்தியது. இதனிடையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மீண்டும் உயிர்ப்புடன் செயல்படத்தொடங்கியது. இன்றும் கேரளா மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
எண்ணற்ற கட்சிகள்
மேலும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, தவ்ஹீத் ஜமாத், மனிதநேய ஜனநாயக கட்சி, அக்பர்தீன் ஒவைசி கட்சி என பல இஸ்லாமிய கட்சிகள் புதிதாக தோன்றின. இதனால் சுலைமான் சேட் சாஹிபால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய லீக் கட்சி அடியோடு ஆட்டம் கண்டது. பெயரளவுக்கு நிர்வாகிகள் உள்ளனரே தவிர சொல்லிக்கொள்ளும் வகையில் செயல்பாடுகள் இல்லை.
போர்க்கொடி
இதனால் இந்திய தேசிய லீக் கட்சியை கலைக்க வேண்டும் என்றும், இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனதில் வைத்து செயல்படாமல் உள்ள இயக்கங்களை அதன் தலைவர்கள் கலைத்துவிட்டு ஒரே அமைப்பாக திரள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார் நிஜாமுதீன். இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.