மழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களுக்கு மிதமான மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களுக்கு மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அணைகள் நிரம்பியுள்ளன. உபரி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் 10ஆம் தேதிவரை கொட்டிய கனமழையால் நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர், கூடலூர், அவலாஞ்சி ஆகிய பகுதிகள் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளன. கடந்த இரு தினங்களாக சற்றே குறைந்தாலும் சராசரியாக 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது. பருவமழைக்காலம் முடிந்து விட்டதா இனி மழை இல்லையா என்று நினைக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுச்சேரி, காரைக்கால், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
ப்பா.. 42 நாளில் 55% அதிகம் பெஞ்சிருக்கு.. இதுதான் பெஸ்ட் பருவமழை.. தமிழகத்தை புரட்டி எடுத்த வானிலை!
வேலூர் ,சேலம் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யலாம்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவா ,மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.