இப்படி நடுத்தெருவில் நிறுத்திட்டாங்களே.. பாலத்துக்கு கீழே நின்று புலம்பிய நிர்மலா தேவி, முருகன்
Recommended Video
சென்னை: மாணவிகளை தவறான பாதைக்கு கேட்டுவிட்டு தற்போது நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்களே என ஒரு பாலத்துக்கு கீழ் நிர்மலா தேவியும் முருகனும் புலம்பியதாக அவரது வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அதில் அவர் கூறுகையில் ஏப்ரல் 8-ஆம் தேதி மதியம் நான் மாணவிகளுடன் பேசிய ஆடியோ பதிவு வாரப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த தகவல் எனக்கு தெரியவந்தது.
பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போவதால், இதுகுறித்து முருகனிடம் பேசலாம் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் செல்ல முடிவெடுத்து பல்கலைக்கழக அதிகாரிக்கு ஏப்ரல் 10-ந் தேதி காலை எஸ்.எம்.எஸ். செய்தேன். அவர் சாயங்காலம் எல்லோரும் கிளம்பிய பிறகு வாருங்கள் என்று எனக்கு போன் செய்து கூறினார். அதன்படி, மாலை 6 மணிக்கு பல்கலைக்கழகம் வந்து முருகனை சந்தித்து பேசினேன். அவருடைய கார் டிரைவர் அப்போது அங்கிருந்தார்.
காளவாசல் பேக்கரி
முருகன் என்னைப் பார்த்து, "ஏம்மா இங்க வந்தீங்க. பல்கலைக்கழகத்தில் யாராவது பார்த்தா, இப்ப உங்களை எல்லாருக்கும் தெரியுமே" என்று சொல்லி காளவாசல் அருகில் உள்ள ஒரு பேக்கரி கடை அருகே காத்திருக்க சொன்னார். ஆனால், அங்கு கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், நான் அங்கு செல்லாமல், காளவாசல் போகும் வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தேன்.
காப்பாற்றுங்கள்
அப்போது முருகன் எனக்கு போன் செய்து மாட்டுத்தாவணி அருகே வரச்சொன்னார். நான் அங்கு கிளம்பி சென்று கொண்டிருந்தபோது, முருகன் மறுபடியும் போன் செய்து மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அருகேயுள்ள பாலத்திற்கு வரச்சொன்னார். நான் அங்கு சென்றபிறகு முருகனும் அங்கு வந்தார். ‘என்னை எப்படியாவது இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள்' என்று நான் அவரிடம் சொன்னேன்.
5 லட்சம்
அதற்கு அவர், ‘கருப்பசாமியால் நீங்களும், நானும் இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். நான் இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். என்னை இந்த பிரச்சினையில் இழுத்துவிட்டு விடாதீர்கள். ஏற்கனவே, துணைவேந்தருக்கும், பதிவாளருக்கும் நிறைய பணம் செலவு பண்ணிட்டேன். உங்க பொண்ணுக்கு இந்த வருடம் கல்விக் கட்டணம் கட்ட ரூ.5 லட்சம் தருகிறேன்' என்று சொன்னார். நான் உடனே ‘இப்ப அவசரமாக ரூ.1 லட்சம் கொடுங்கள்' என்று கேட்டேன். அவரும் கையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை என்னிடம் கொடுத்தார். வேறு ஏதாவது பல்கலைக்கழகத்தில் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாகவும்சொன்னார்.
அருப்புக்கோட்டை
அதன்பிறகு, நான் அங்கேயே நின்றபடி, பல்கலைக்கழக அதிகாரிக்கு போன் செய்து அவரை வரச்சொன்னேன். அவரும் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தார். நான் அவரது காரில் ஏறிக்கொண்டேன். அப்போது, முருகனை சந்தித்தது குறித்தும், அவர் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருவதாக கூறியதையும் அவரிடம் கூறினேன். பிறகு அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டேன்.
பிளாக் செய்த கருப்பசாமி
அங்கு இருந்தபடி, கருப்பசாமியை போனில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் என்னுடைய எண்ணை ‘பிளாக்' செய்துவிட்டார்.
ஏப்ரல் 14-ந் தேதி அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன், பதில் இல்லை. பின்னர், முருகனுக்கு போன் செய்து நிலைமை மோசமாவதை கூறி உதவி
செய்யுமாறு கேட்டேன். பிறகு 15 மற்றும் 16-ந் தேதிகளில் முருகனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன்.
2 லட்சம் கேட்டேன்
ஆனால் பதில் இல்லை. ஏப்ரல் 12-ந் தேதி முருகனின் நண்பர் ராஜபாண்டியனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எஸ்.எம்.எஸ். அனுப்பி, முருகனிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பெற்றுத் தருமாறு கூறினேன். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. 14 மற்றும் 15-ந் தேதிகளில் மாணவிகள் 4 பேருக்கும் தொடர்ச்சியாக எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை.
சந்திக்க வர சொன்னேன்
ஏப்ரல் 16-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு எனது தாயார் வசிக்கும் தெருவை சேர்ந்த ஒருவரின் மைத்துனர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மற்றொருவருடன் என்னை வந்து சந்தித்து, 2 சமூக ஆர்வலர்கள் என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்கள். நானும் சரி என்று அவர்களை சந்திக்க வரச்சொன்னேன்.
உதவி
ஆறுமுகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும், அவருடன் மற்றொருவரும் என்னை வந்து சந்தித்து, கல்லூரிக்கு வெளியே போராட்டம் நடைபெறுவதாகவும் என்னை கைது செய்ய எந்த நேரத்திலும் போலீஸ் வரலாம் என்றும் கூறினார்கள். மேலும், நான் விருப்பப்பட்டால் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக கூறியதன்பேரில், நான் அதற்கு சரி என்று
கூறியதால், அவர்கள் 5 நிமிடத்தில் வருவதாக கூறிச் சென்றார்கள்.
கைது
அவர்கள் வெளியே சென்றவுடன் ராஜாவிடம் இருந்து எனக்கு போன் வந்தது. போலீஸ் என் வீட்டிற்கு வருவதாக தகவல் சொன்னார். நான் உடனே வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு, உள்ளே இருந்தபடி ராஜா மற்றும் ஆறுமுகத்துக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்னை கைது செய்து அழைத்து சென்றார் என்றார்.