என்னா கோபம்.. சீற்றம்.. சென்னையில் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்ட நிருபர்கள் பட்டபாடு
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று, நிருபர்களிடம் இன்று பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடும் கோபத்தோடும், சீற்றத்தோடும் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்னை வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆனால் இந்த சந்திப்பிற்கு எதற்காக சென்றோமோ என்று செய்தியாளர்கள் நினைக்கும் அளவுக்கு, பதில்களை சொன்னார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமன் கூறியதை பாருங்கள்: மும்பையில், தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனையை நிறைவேற்றினோம். ஆனால் பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக எந்த ஒரு தண்டனையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் புல்வாமாவில், இந்தியாவின் 40 ஜவான்கள் கொல்லப்பட்டனர். எனவே, பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
சேர்ந்து கத்தினா கேக்காது
பாகிஸ்தானை சேர்ந்த எந்த ஒரு மக்களுக்கும் சேதமில்லாமல் தாக்குதலை நடத்தியுள்ளோம். புல்வாமாவிற்கு பிறகு நாம் செய்தது மிலிட்டரி தாக்குதல் கிடையாது. தீவிரவாத முகாம்களுக்கு எதிரான தாக்குதல்தான் என்றார். அப்போது, நிருபர்கள் கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்தனர். இதனால் நிர்மலா சீதாராமன் முகத்தில் கடுகடுப்பு தொற்றிக் கொண்டது. ஒரு நிமிஷம்ங்க.. எல்ல்லாருக்கும் பதில் சொல்றேன்.. ஆனா கொஞ்சம் பொறுமையா கேளுங்க.. எல்லாரும் சேர்ந்து கத்தினா எனக்கு எதுவும் காதுல விழ மாட்டேங்குது.. என்றார்.
யார் அலுவாலியா
எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றி, குழப்பம் நீடிக்கிறதே, இந்திய விமானப்படை அது எங்கள் வேலையில்லை என்கிறது. அமித்ஷாவோ எண்ணிக்கையை கூறுகிறார். அலுவாலியாவா, இது கொல்ல நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என்கிறாரே என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறிக்கிட்ட நிர்மலா சீதாராமன், யார் அலுவாலியா? என்று கேள்வி எழுப்பினார். அந்த நிருபர் பதிலுக்கு, எஸ்.எஸ்.அலுவாலியா என்று சொன்னார்.
எனக்கு தெரியும்
மீண்டும் நிருபர் கேள்வியை தொடரவே கோபமடைந்தார் நிர்மலா சீதாராமன், உங்கள் கேள்வியை சிம்பிளாக்குங்கள். எத்தனையை நான் ஃபாலோ செய்ய முடியும் என்றார். நிருபர் மீண்டும் விளக்க முயலவே, "எனக்கு தெரியும்.. எனக்கு தெரியும்.. நீங்க என்ன சொல்ல வாரீங்கன்னு" என்று முகத்தில் அடித்ததுபோல கூறி நிர்மலா சீதாராமன், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து கூற முடியாது என்றார்.
உங்க கருத்து
இம்ரான் கான் அமைதி தூதுவர் போல தோற்றம் உருவாகியுள்ளதே, நமது நிலைப்பாட்டை நிரூபிப்பதில் நாம் பின்னடைவை சந்தித்துள்ளோமா என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்ப, "உங்க கருத்துக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாதுங்க" என்று கூறிவிட்டார்.
சும்மா இருங்க
லோக்சபா தேர்தலில் நீங்க போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற நிருபரின் கேள்விக்கு, நிருபரை பார்த்து சும்மா இருங்க என்பதை போல கையை காட்டி அடுத்த கேள்விக்கு போய்விட்டார்.
நான் சொல்ல முடியாது
அபிநந்தன் விடுதலையில், அமெரிக்கா, வட கொரியா பங்களிப்பு இருந்ததாக டிபிஆர்கே ட்வீட் செய்துள்ளதே என்ற நிருபர் கேள்விக்கு, "என்னது டிபிஆர்கே" என்று பதில் கேள்வி எழுப்பினார். வட கொரியா என்று நிருபர் பதில் அளித்தார். "அதனால்தான் நான் கேட்கிறேன்.. டிபிஆர்கே என்றால் என்ன" என்று மீண்டும் கேள்வி எழுப்பினார் நிர்மலா சீதாராமன். அதற்கு நிருபர், டெமாக்ரடிக்.. என ஆரம்பித்தார். அப்போதும் குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், வட கொரியா சொன்னதற்கு நான் ஏன் கமெண்ட் சொல்ல வேண்டும் என கோபத்தோடு கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும், யாரிடம் யார் கேள்வி எழுப்பினார்கள் என்ற குழப்பமே நிருபர்களுக்கு வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.