"மனசெல்லாம் ரியோ.. என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான்.. அவன்தான்.." நெகிழ்ச்சி நிஷா
நிஷாவின் அன்பு அனைவரையும் மலைக்க வைத்து வருகிறது
சென்னை: எதுவாக இருக்கிறாரோ, அதுவாகவே இருக்கிறார் நிஷா.. எப்படி உள்ளாரோ, அப்படியே சுயத்தை வெளிப்படுத்தி வருகிறார் நிஷா.. அதனால்தான் எதிரிகளே அவ்வளவாக இல்லாமல் அதேசமயம் அன்பு அக்காவாக கண்ணீர் வடித்து வருகிறார்.இத்தனை முறை நடந்த சீசனில் மிகவும் வித்தியாசமானவர் நிஷா.. ஏற்கனவே இவர் பிரபலமான நபர் என்றாலும், முழுமையான குணம் தெரிய வாய்ப்பிருந்ததில்லை.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில், யார் என்ன, எவ்வளவு கலாய்த்தாலும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாத இவரது இயல்பு அனைவருக்குமே பிடித்திருந்தது.. நிஷாக்கா எப்பவுமே கோபித்து கொள்ள மாட்டாங்க என்ற பேரை, பலரிடம் பெற்றிருக்கிறார்.
அதுபோலவே, கஜா புயலின்போது நிஷா மேற்கொண்ட முயற்சிகள், ஒரு காமெடி நடிகை என்பதையும் தாண்டி மனிதத்தை வெளிப்படுத்தியது. வீட்டில் தன்னுடைய பச்சிளம் பிள்ளைகளை விட்டுவிட்டு, நிவாரண பொருட்களை அள்ளி தன்னுடைய காரில் போட்டுக் கொண்டு, பஸ் வசதி இல்லாத எத்தனையோ குக்கிராமங்களுக்கு சென்று வழங்கியதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.
அன்பு
அந்த அதீத கரிசனமும், இரக்கமும்தான் நிஷாவை தற்போது கண்ணீர் விட வைத்து வருகிறதோ என்னவோ.. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே ரியோ மீது அப்படி ஒரு பாசம்.. தம்பி தம்பி என்று இவர் உருகும் வார்த்தைகள் அந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களையே கேள்வி கேட்க வைத்துவிட்டது..
கேம்
"ரியோ பின்னாடியே ஒளிந்து கொண்டு நிஷா கேம் ஆடுகிறார்" என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.. ஆனாலும், ரியோவுக்கு பின்னால் தான் விளையாடவில்லை என்று மறுபடியும் மறுபடியும் நிஷா விளக்கினாலும், அவர் அப்படித்தான் விளையாடி கொண்டிருக்கிறார் என்பதை மறுக்க முடியவில்லை.
என் தம்பி ரியோ
நேற்றும்கூட அனிதா இதே கேள்வியை நிஷாவிடம் கேட்டதற்கு, "காதலோடு ஒருத்தர் எனக்காக வருவார், அவர் ஏன் கணவர், அவரை இங்கே பார்க்க முடியாது. ஆனால், கண்களில் நம்பிக்கையோடு என்னை ஊக்கப்படுத்தும் என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான் அவன் தான் என் தம்பி ரியோ" என்று நிஷா சொல்லும்போதே தூரமாக இருந்து பார்த்து கொண்டிருந்த ரியோ கண்ணிலும் நீர் வழிந்தது.
பிறந்த நாள்
நிஷாவின் பிறந்த நாளுக்கு "அய்யய்யோ.. நீ அழகா பொறந்துட்டியே' என்று ரியோ ஹேப்பி பர்த்டே பாடும்போது, குழந்தைத்தனமான முகபாவங்களுடன் நிஷா கலங்கிப்போக, "சரி... சரி... அழக்கூடாது" என்று வழக்கம் போல் ரியோ சமாதானம் செய்ததையும் காண முடிந்தது.
பாலாஜி
கடந்த வாரம், "ஏன் என்னாச்சு, ஏன் அழறே" என்று ரியோ கேட்க, "நான் ஆடியன்ஸ பார்க்கலன்னு குத்துறாங்கடா.. விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை இல்லன்னு சொல்றாங்கடா.. ஆடியன்ஸ் மேல நம்பிக்கையில்லையாம்.. அந்த பாலாஜி குத்திக்கிட்டே இருக்கான்டா.. நான் உன் பின்னாடியே இருக்கேன்னு சொல்றாங்க. நீ எனக்கு என்னடா சொல்லி கொடுத்தே?
விளையாட்டு
அன்பா இருந்தா பொய்யா இருக்கேன்னு சொல்றாங்க.. எதுவுமே பேசலன்னா சேஃப் கேம் ஆடுறேன்னு சொல்றாங்க.. ரொம்ப குத்துறாங்கடா.. எல்லாம் பொய்யா இருக்காங்கடா" என்று ரியோவை கட்டிப்பிடித்து நிஷா அழுத அழுகைக்கு யாரிடமும் பதில் இல்லை.. இந்த விளையாட்டில் நிஷா வெற்றி பெறுவாரா அல்லது வெளியேறுவாரா என்று தெரியவில்லை.. ஆனால், அன்பென்றால் அது நிஷா!