2008 நவம்பரில் நிஷா 2020ல் நிவர் - தமிழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் சூறையாடிய பெரும் புயல்கள்
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பல புயல்கள் தாக்கியுள்ளன. இந்த புயலினால் அதிகம் பாதிக்கப்பட்டது கடலூர், வேதாரண்யம், காவிரி டெல்டா மாவட்டங்கள்தான். கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தை பல புயல்கள் சூறையாடியுள
சென்னை: தமிழகத்தை புயல் தாக்குவது ஒன்றும் பெரிய விசயமில்லை. இரண்டாயிரமாவது ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் கடலோர மாவட்டங்களை சூறையாடிய சுனாமியையே பார்த்திருக்கிறார்கள். 2008ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி நிஷா புயல் தமிழகத்தினை தாக்கியது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 24ஆம் தேதி நிவர் புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை புயல்கள் தாக்கியுள்ளன எங்கெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.
வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் புயல் தாக்கும் என்று அனைவருக்கும் தெரியும். கடந்த 2005ஆம் ஆண்டில் தாக்கிய ஃபர்னூஸ் புயல் தொடங்கி நிஷா, ஜல், தானே, நீலம், மடி, வர்தா, ஒக்கி, கஜா என பல புயல்கள் தமிழகத்தை தாக்கியுள்ளன.
கடந்த 2005ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பியார், பாஸ், ஃபர்னூஸ் என்ற மூன்று புயல்கள் வங்கக் கடலில் உருவானது. இதில், டிசம்பர் முதல் வாரத்தில் உருவான ஃபர்னூஸ் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 2005ம் ஆண்டு மொத்தமாக 773மில்லிமீட்டர் மழை பெய்தது. இது 79 சதவீதம் இயல்பைவிடக் கூடுதல்.
நிரம்பிய நீர் நிலைகள்
2005ஆம் ஆண்டு தாக்கிய புயலால் தமிழகமே வெள்ளக்காடானது. மாநிலம் முழுவதும் கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.
நிஷா புயல்
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக உருமாறியது. நிஷா புயலின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேல் கனமழை பெய்தது, சுமார் 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளது. 170க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
சென்னையை கடந்த ஜல்
கடந்த 2010ஆம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், நவம்பர் 6ஆம் தேதி 111 கி.மீ வேகத்தில் சென்னையைக் கடந்து சென்றது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதிதீவிர புயல்
கடந்த 2011ஆம் ஆண்டு வங்கக் கடலில் உருவான தானே புயல்தான் முதலாவது அதிதீவிரப் புயலாகும். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. 40,000 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துச் சென்றது இந்தப் புயல்.
மடி புயல்
கடந்த 2012ஆம் ஆண்டு, அக்டோபர் 28ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி பின் நீலம் புயலாக மாறியது. பல நகரங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. அடுத்த ஆண்டே கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மடி புயல் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.
வர்தா புயல்
கடந்த 2016ஆம் ஆண்டில் ஆண்டில் உருவான ரோனு, கியான்ட், நடா புயல்களால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும், வருடக் கடைசியான டிசம்பர் மாதம் உருவான வரதா புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து. டிசம்பர் 12 சென்னையைக் கடந்து சென்றது. இந்தப் புயலின்போது எண்ணூர் துறைமுகத்தில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டிருந்தது.
1000 கோடி சேதம்
இந்தப் புயலின் தாக்கத்தால் சென்னை மாநகரமே திண்டாடிப் போனது. பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. பல நாட்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து முடங்கியது.
கன்னியாகுமரியை புரட்டிய ஒக்கி
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் கேரளாவைப் புரட்டிப் போட்டுச் சென்றது ஒக்கி புயல். பல ஆயிரக்கணக்கான மரங்களையும், மின்சார கம்பங்களையும் பிடுங்கி வீசிச்சென்றது. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. கன்னியாகுமரியே தனித்தீவானது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாயினர். இந்தப் புயல் பாதிப்பிலிருந்து இன்னமும் பலர் மீளவில்லை.
10 மாவட்டங்கள் பாதிப்பு
கடந்த 2018ஆம் ஆண்டு தாக்கிய கஜா புயலால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள், விவசாயப் பயிர்கள் பெரும் சேதமடைந்தன. 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான படகுகள் சுக்கு நூறாகின. பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து நாசமாக்கியது. கஜா புயலின் தாக்கத்திலிருந்து வேதாரண்யம், நாகை பகுதி மக்கள் இன்னும் மீளவில்லை.
சென்னையை நெருங்கும் நிவர்
தமிழக கடற்கரையில் நிவர் புயல் கரையை கடக்க உள்ளது. இரண்டு ஆண்டுகளில் கஜா புயலுக்கு பிறகு தமிழகத்தில் கரையை கடக்கும் புயலாக இது உள்ளது. இந்த புயலால் 20 செ.மீ அளவிற்கு மிகவும் கனமழை புதன்கிழமை என்று பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாவட்டங்களில் புதன்கிழமை அன்று 24 செ.மீ அதிகமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளது.
கனமழையால் பாதிப்பு
இந்த புயலின் தாக்கத்தால் தமிழக வடக்கு கடற்கரை மாவட்டங்கள் பாதிப்பை சந்திக்கும். புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், ஆகிய இடங்களில் செவ்வாய் கிழமை அன்று கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது புதுவை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை புயல் வந்தாலும், பெருமழை பெய்தாலும் இதுவும் கடந்து போகும் என்று தமிழக மக்கள் மீண்டு விடுகின்றனர் என்பதுதான் உண்மை.