நித்தியானந்தாவை காணவில்லை.. எங்கே போனார்?
நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: பாடி லேங்குவேஜூடன் ஆல் லாங்குவேஜ் கலந்து பேசி கொண்டிருந்த நித்தியானந்தாவைக் காணோமாம்!! இதுதான் இப்போதைக்கு ஹாட் நியூஸ்!!
கர்நாடகத்தில் மெயின் "ஆபீஸ்" இருந்தாலும் உலகம் முழுவதும் பக்தர்களை குறிப்பாக பக்தைகளை கொண்டிருப்பவர் நித்தியானந்தா.
வருஷத்துக்கு ஒருமுறை, ரெண்டு முறையாவது இவர் மீது ஏதாவது புகார்கள், சர்ச்சைகள், செய்திகள் மீடியாவை ஆக்கிரமிக்கும்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
அப்படித்தான் 2010-ம் ஆண்டு பக்தை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதியப்பட்டது. இது சம்பந்தமாக ராம்நகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை பற்றி நித்தியானந்தாவிடமும் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட இருந்தது.
காலாவதி பாஸ்போர்ட்
இந்த நேரத்தில் நித்யானந்தாவை காணவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு அவர் தப்பியிருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரியவில்லை. ஏனெனில், அவருடைய பாஸ்போர்ட் எப்போதோ காலாவதி ஆகிவிட்டது.
கள்ள பாஸ்போட்
ஒருவேளை கள்ள பாஸ்போர்ட்டில் அவர் போயிருக்கிறாரா என்றும் தெரியவில்லை. இருந்தாலும், இந்த கேஸ் முடியும்வரை பாஸ்போர்டை புதுப்பிக்கக்கூடாது போலீசார் சொல்லி விட்டார்கள். அதன்படி நித்தியானந்தாவும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமலேயே இருக்கிறார்.
கன்னட சேனல்கள்
இந்த நிலையில், பாலியல் சம்பந்தமான விசாரணைக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்குத்தான் தப்பியிருப்பார் என கூறப்படுகிறது. இந்த தகவல்களை நேற்று முதலில் வெளியிட்டதே கன்னட சேனல்கள்தான்.
கார்ப்பரேட் சாமியார்
அதாவது, நேபாள நாட்டுக்கு சாலை மார்க்கமாக நித்தியானந்தா சென்று, அதன்பிறகு போலி பாஸ்போர்ட் மூலம் பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள கெய்மன் தீவுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அந்த தீவில் கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தாவுக்கு என்ன வேலை என்று தெரியவில்லை. அங்கு போய் மறைந்து கொண்டால் இங்குள்ள பக்தைகளின் நிலை என்னாவது?
ஆபாச வீடியோ
வெளிநாட்டுக்கு தப்பி சென்ற எத்தனையோ முக்கிய புள்ளிகளை நம் நாட்டு போலீசார் பிடித்து கொண்டு வந்துள்ளனர். விரைவில் நித்தியானந்தாவும் பிடிபடுவார் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் மீது நடிகை ஒருவருடன் இருந்த ஆபாச வீடியோ வெளியான வழக்கின்போது தலைமறைவான நித்தியானந்தா பின்னர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டார் என்பது நினைவிருக்கலாம்.