"சொக்கா, சொக்கா.. இந்துக்களே ஆபத்து நெருங்குது" நித்யானந்தாஜி.. இப்படி போட்டு மிரட்டினா எப்படி சாமி
நித்யானந்தா எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "நான் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது தமிழர்களுக்கு ஆபத்து" வீடியோ வெளியிட்டுள்ள நித்யானந்தா, அந்த வீடியோவின் நடுநடுவே "சொக்கா, சொக்கா" என்று உருகி திருவிளையாடல் பட வசனத்தையும் தன் பாணியில் பேசுகிறார். மேலும் "இந்துக்களே ஆபத்து நெருங்குகிறது" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்து கொண்டு.. நித்தம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கிறார் நித்யானந்தா.. தினம் ஒரு வீடியோ என்ற வகையில் புது புது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.. அந்த வகையில் இப்போதும் ஒருவீடியோ வெளியாகி உள்ளது.
அதில், மதுரை ஆதீனத்தை சுட்டிக் காட்டி உள்ளார்.. தாம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது தமிழர்களுக்கு ஆபத்து என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் ஆங்காங்கே திருவிளையாடல் படத்தின் வசனத்தை போலவே பேசி நடுநடுவே சொக்கா, சொக்கா என்று உருகி உள்ளார்.
மீனாட்சி அருள்
அதன் சுருக்கம் இதுதான்: "என் மீது எத்தனை கொலைவெறி தாக்குதல்கள்? எத்தனை மத தாக்குதல்கள்? எத்தனை நிலைகளில் என்னை தாக்கப் பார்த்தார்கள்? இதை உபயோகப்படுத்தி அழித்து விடத் துடித்தார்கள்? வழக்கை போட்டு என் வாழ்க்கையை முடித்து விட நினைத்தார்கள்? ஆனால் மீனாட்சி அருளால், சொக்கநாதர் ஆசியால், ஞானசம்பந்தர் அருளால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. நான் இப்போ சேஃப் -ஆ இருக்கேன்.
மதுரை ஆதீனம்
தமிழ்நாட்டுக்கும், எனக்கு இருக்கிற ஒரே உறவு அண்ணாமலையார் கோயில், மீனாட்சி அம்மன் கோவிலும் தான். ஆனால் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான எந்த கோயிலுக்கும் வரக்கூடாது என தீர்ப்பு எழுதிவிட்டார்கள். அப்படின்னா, வேறு என்ன பண்ணலாம்? சொக்கநாதன் கொடுத்ததை சத்தியம் என்று நிரூபிக்க வாழ்ந்து தான் தீருவேன். உடனே அவரை அழைத்தேன்... என்ன பரிசு கிடைத்ததா? எனக்கேட்டார். குற்றம் என்று சொல்லிவிட்டார்கள் என்றேன்.
அடா பரமசிவன்
மீனாட்சி, மீனாட்சி என்றேன்.. ஏன் என்ன ஆச்சு தம்பி? என்றார்... தம்பி உனக்கு ஒரு ஆசிரமத்தை உருவாக்கித் தருகிறேன் என்று வாக்குறுதி தந்தார்.. நான் இப்போது அமர்ந்திருப்பது மீனாட்சி கொடுத்த சிம்மாசனம்தான்.. அடா பரமசிவன் கொடுத்து ஞானம்... இது கர்வம் அல்ல. தமிழகத்திலிருந்து என்னை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றால் தமிழக இந்துக்களே விழித்துகொள்ளுங்கள்.
திராவிட ஆக்டோபஸ்
இந்த அபாய ஒலி.. அபாயமணி.. அபாய செய்தி எனக்கல்ல... அது உங்களுக்கு. காலம் நான் சொல்வது உங்களுக்கு புரிய வைக்கும். சொக்கரும் மீனாட்சியும் என்னை காப்பாற்றி விட்டார்கள். திராவிடம் ஆக்டோபஸ் மாதிரி. தமிழகத்தையே காலி செய்து விட்டது. வலிக்கும் என்பதுதான் வலிக்கின்ற உண்மை. விஷத்தில் சர்க்கரை தடவி கொடுக்க கூடிய கும்பல் திராவிட கும்பல். அதற்கு தமிழ் என்ற சக்கரையை பயன்படுத்துகிறார்கள்.
விழித்து கொள்ளுங்கள்
லூசு தனமா, தமிழ் கலாச்சாரத்தையும், இந்து மத்தையும் கிழித்து சிதைக்கின்ற வேலையை பொறுமையா பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கோம்.. நமக்கென்னன்னு.. உங்க ஆணிவேர் அறுபட்டு கொண்டு இருக்கிறது.. தமிழ் சமுதாயமே விழித்து கொள்ளுங்கள்.. இந்துக்களே விழித்து கொள்ளுங்கள்" என்கிறார்.இந்த வீடியோ வழக்கம்போல் பரபரப்பாகி வருவதுடன், வைரலாகியும் வருகிறது.