அரசு மருத்துவமனைகள் இனி தனியார்வசம்... இலவச சிகிச்சைக்கு வேட்டு வைக்கும் நிதி ஆயோக்
சென்னை: மாவட்ட அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரை கோடான கோடி ஏழை எளிய மக்களின் தூக்கத்தை கலைத்துள்ளது.
அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவோர், குறைந்த வருமான உடையோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் அரசு மருத்துவமனைகள் தான் உயிர்காக்கும் உயர்விடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் ஏழை எளிய மக்களின் சாபத்திற்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாகியுள்ளது நிதி ஆயோக்.
வேகமாக வந்த கார்.. ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரிகள்.. பஞ்சர் செய்த ஸ்பைக்ஸ்.. நாடாளுமன்றத்தில் பரபர!
மருத்துவமனைகள்
எல்.ஐ.சி., ரயில்வே, ஏர் இந்தியா, வரிசையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது மத்திய அரசு. இதற்கு காரணம் நிதி ஆயோக் அளித்த வலுவான பரிந்துரை தான். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. குடியுரிமை சட்டம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த விவகாரம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. நிதி ஆயோக்கின் பரிந்துரையை ஏற்று அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்க மத்திய அரசு ஒரு வேளை நடவடிக்கை எடுத்தால் ஏழை எளியோருக்கு தரமான சிகிச்சை என்பது எட்டா கனியாக மாறிவிடும்.
நிதி ஆதாரம்
நாடு முழுவதும் தகுதி வாய்ந்த மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவ்வாறு தகுதி வாய்ந்த மருத்துவர்களை நிரப்புவதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் அரசிடம் இல்லை என்றும் நிதி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் பங்களிப்பு என்ற நடைமுறையை கொண்டுவரலாம் என்ற யோசனையை தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் கொடுக்கப்படும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் தனியார் நிர்வாகமே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம் என குருட்டு யோசனையையும் இந்த நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
முன் மாதிரி
ஆஸ்திரேலியா, நார்வே, நியூஸிலாந்து, டென்மார்க், உள்ளிட்ட நாடுகளில் அரசு சார்பில் முற்றிலும் இலவச சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில் இந்தியாவில் இது போன்று ஒரு நடைமுறையை தொடங்கினால், அது பன்னாட்டுதனியார் மருத்துவமனைகள் இங்கே கடை விரிக்க தொடங்கிவிடும் என அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுக்கின்றனர். மேலும், நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்ககூடாது என்றும், அப்படியே ஏற்றுக்கொண்டால் கூட அதனை கேரளாவில் செலபடுத்த மாட்டோம் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கம் போல் தமிழக அரசு வாய்மூடி மவுனியாகவே உள்ளது.
எதிர்ப்பு
நிதி ஆயோக்கின் பரிந்துரையை சமூக சமுத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பதோடு, இந்த பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதால் ஒரு தீர்வும் ஏற்படாது என்றும், அதனால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யத்தேவையில்லை எனவும் இதே நிதி ஆயோக் தான் மத்திய அரசுக்கு யோசனை கூறியிருந்தது. இப்போது அடுத்ததாக ஏழை எளிய மக்களின் சாபத்திற்கு ஆளாகும் வகையில் புதிய யோசனையை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து மத்திய திட்டக்குழுவை மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு கலைத்துவிட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.