கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி
சென்னை: கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துள்ளார். விரைவில் அவரும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பொறுப்பேற்க உள்ளது. இதற்காக மத்திய அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவரான நிதின் கட்கரி மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் அண்மையில் பேசிய நிதின் கட்கரி, தாம் மத்திய அமைச்சரவையில் மீண்டும் பொறுப்பேற்றதும், கோதாவரி-கிருஷ்ணா- காவிரி நதிகள் இணைப்புத் திட்டமே தனது முதல் பணியாக இருக்கும் என்று கூறினார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி நீர் கிடைக்கும் என குறிப்பிட்டார். அவரின் இந்த அறிவிப்புக்கு தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றி தரப்படும் என கூறியுள்ள நிதின் கட்கரிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் கடுமையாக நிலவி வரும் இந்த நேரத்தில், இத்திட்டம் மிகவும் அத்தியாவசியமானது என முதல்வர் கூறியுள்ளார்.
Hearty thanks @nitin_gadkari ji for the announcement to link Godavari and Krishna. This project is very crucial at the moment, as it can widely resolve the water scarcity in Tamil Nadu.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 26, 2019
கட்கரி அறிவித்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் தீர்கப்பட்டு விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் முதல்வர்.
முன்னதாக சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து அதன் மூலம் காவிரிக்கு நீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளிதாா்.
தற்போது இத்திட்டம் குறித்து இப்போது நிதின் கட்கரியும் பேசியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றி தர மத்திய அரசிடம் தமிழம் கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
காவிரியிலிரந்து தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்காத நிலையில், கோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்புத் திட்டம் மூலம் தமிழகத்துக்கு தேவையான நீரைக் கொண்டு வர முடியும் என கருதப்படுகிறது.