நிவர் புயல்: சென்னையில் 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்கவைப்பு
நிவர் புயலின் தாக்கத்தினால் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாமில் தங்கவைப்பட்டுள்ளனர். சென்னையில் சுமார் 1516 முகாம்களில் 1.33 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட15 மண்டல பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் என சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பர்மா காலணி, ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கக் கூடிய மக்கள் அனைவரும் வெள்ள நிவாரண முகாமுக்கு செல்ல மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.
இதுவரை அமைக்கப்பட்டுள்ள 1516 நிவாரண முகாம்களில் சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் முகாம்களில் உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்படுகிறது. மருந்துகள், போர்வைகள் என அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பின் போது அதிகப்படியான பாதிப்பை சந்தித்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.