நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் பல மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும், உள் மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களை சூறையாடி விட்டது நிவர் புயல். வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் கரையை கடந்த பின்னரும் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசும், உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பதூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நடக்க இருக்கும் நிகழ்வுகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தீவிர புயல் கரையை கடந்த பின்னர் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இதன் காரணமாக 26ஆம் தேதியன்று உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் பலத்த மழை பெய்யக்கூடும். 20 செமீ அளவிற்கு மழை பதிவாகும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
சூறாவளிக் காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடை இடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகளின் மேற்கூரைகள் பாதிப்பிற்கு ஆளாகும். மரங்கள் வேரோடு சாயும். மின் இணைப்புகள், தொலை தொடர்புகள் துண்டிக்கப்படலாம். வாழை, பப்பாளி மரங்கள் சாயும்.
பொதுமக்கள் வீட்டில் பத்திரமாக இருக்கவேண்டும். பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.