நெருங்கும் நிவர்: 4713 ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்களை அனுப்பி வைத்த அரசு
நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4,713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
சென்னையில் இருந்து 591 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 550 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புயலின் மையப்பகுதி மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடக்கும் இடங்களிலும் பாதிப்பு இருக்கும். மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் நவம்பர் 25ம் தேதி பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
புயல் காரணமாக கடல் அலைகள் இயல்பைவிட 2 மீட்டர் வரை உயரக்கூடும். வங்கக் கடலில் தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக நாளை, நாளை மறுநாள் காவிரி டெல்டா, வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். 24ஆம் தேதி கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலூர், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 25-ம் தேதி பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிவர் புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 4,713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு போதிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.