இரவு கரை கடக்கும் புயல்.. "காரைக்கால்"மீது குவியும் கவனம்.. உச்சக்கட்ட அலர்ட்.. 1000 மீனவர்கள் எங்கே
காரைக்காலில் மீனவர்கள் மாயமாகி உள்ளனர்
சென்னை: இன்று மாலை அல்லது இரவுதான் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 1000 மீனவர்களை காணோமாம். காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகிவிட்டார்களா என தெரியாமல் அவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறி இன்று சென்னைக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது... இதையடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.. மேலும் அதற்கான பணிகளை துரிதப்படுத்தியும் வருகிறார்.
கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது... மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், நேற்றே பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.. இன்று கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டன...
அதேபோல, நாகையிலும் தொலைதூரம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.. மாவட்டத்தில் 22 புயல் பாதுகாப்பு மையங்கள், 66 பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் நேற்று 5ம் எண் உள்ளூர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கைக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை, அக்கரைப்பேட்டை, நம்பியார்நகர் பகுதிகளை சேர்ந்த 200 மீனவர்கள் நேற்று வரை கரை திரும்பவில்லை.. அதேபோல, கோடியக்கரை இலங்கைக்கு இடையே கடலில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 200 மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடலூரை நெருங்கும் நிவர் புயல்.. நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்- வானிலை மையம்
அதேபோல, காரைக்கால் பகுதி கிளிஞ்சல்மேட்டில் இருந்து 250 படகுகளில் சென்ற மீனவர்களில் 700 பேர் மாயமாகி உள்ளனர்.. அவர்களும் கரை திரும்பவில்லை... மாயமான மீனவர்கள் அனைவரையும் மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் அந்தந்த மீனவக் கிராமங்களிலும், மீன்பிடித் துறைமுகப் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "22-ம் தேதிதான், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு வந்தது.. அதனால் ஏற்கெனவே சென்றவர்களை உடனடியாக கரை திரும்புமாறும் சொல்லிவிட்டோம். ஒரு வாரம் முன்னாடியே சொல்லி இருந்தால், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்திருப்பார்கள். தாமதமாக சொன்னதால், முந்தா நாள்கூட மீனவர்கள் சென்றுள்ளனர்" என்றனர்.