நிவர் புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு... 101 வீடுகள் இடிந்து சேதம்... அமைச்சர் உதயகுமார் தகவல்..!
சென்னை: நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் காலை நிலவரப்படி 3 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் குடிசை வீடுகள் உட்பட 101 வீடுகள் இடிந்து சேதமான விவரம் தெரியவந்துள்ளது. இந்தச் சேத மதிப்பு மேலும் உயரக்கூடும் எனத் தெரிகிறது.
நேற்று மாலை முதல் இன்று காலை வரை தமிழகம் முழுவதும் 380 மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் அவை அனைத்தும் போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இதேபோல் விளைபயிர்கள் குறித்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.
நிவர் புயல் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய முழு விவரம் இன்னும் அரசுத்தரப்பில் வெளியிடப்படவில்லை. மேற்கண்ட தகவல்கள் அனைத்து காலை நிலவரப்படி தெரிவிக்கப்பட்ட விவரம்.
தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை விட நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேவேளையில் புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த நிவர் புயல் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்ட 3,085 முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.