இதுவரை சென்னையில் தான் அதிக மழை.. அதிதீவிரமானது நிவர்,, இனி தான் ஆட்டம் ஆரம்பம்!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக மழை பெய்துள்ளது , மகாபலிபுரம் முதல் எண்ணூர் வரை தான் மிக கடுமையான மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையின் நகர்புறங்களில் வலுவாக பெய்திருப்பது வானிலை மையத்தின் புள்ளி விவரங்களில் தெரிகிறது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளம் வடிய கூட நேரம் கொடுக்காமல் தொடந்து கொட்டி வருகிறது மழை.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, சென்னையில்தான் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8மணி நிலவரப்படி அதிகபட்சமாக வட சென்னையில் தான் 16 செமீ மழை பெய்துள்ளது.
எங்கு அதிக மழை
சென்னையின் முக்கிய பகுதியான அண்ணா பல்கலைக்கழகம், சோழிங்கநல்லூர் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் 15 செமீ மழை பெய்துள்ளது. தரமணி, டிஜிபி அலுவலகம், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் 14 செமீ மழை பெய்துள்ளது. மகாலபலிபுரம், ஆலந்தூர், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், புழல், செம்பரம்பாக்கம் பகுதியில் 12 செமீ மழை பெய்துள்ளது.
தாம்பரத்தில் அதிகம்
தாம்பரம் மற்றும் அம்பத்தூரில் 11 செமீ மழையும், பெரம்பூர் , , ரெட் ஹில்ஸ், பூந்தமல்லி, கோலப்பாக்கத்தில் 10 செமீ மழையும் பெய்துள்ளது. எண்ணூர், திருப்போரூர், சோழவரம் பகுதியில் 9 செமீ மழையும் பெய்துள்ளது.
காஞ்சிபுரம் பகுதி
மதுராந்தகம், கேளம்பாக்கத்தில் 8 செமீ மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 7 செமீ மழையும், செங்கல்பட்டு, கொரட்டூரில் 6 செமீ மழையும் பெய்துள்ளது. திருக்கழுக்குன்றம், செய்யூரில் 5 செமீ மழையும் இன்று காலை நிலவரப்படி பெய்துள்ளது.பொன்னேரி, கும்முடிப்பூண்டி, தாமரைப்பாக்கம், போன்ற பகுதிகளில் 4 செமீ மழை பெய்துள்ளது.
பெரிய மழை இனி பெய்யும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. 3 முதல் 1 செமீ அளவுக்குத்தான் பெய்துள்ளது. தற்போது புயல் அதிதீவிரம் அடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்களில் வெளுக்க தொடங்கி உள்ளது. புயல் கரையை கடக்க தொடங்க உள்ள நேரத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என தெரிகிறது. புதுவை அருகே கரையை கடப்பதால் மிகமிக கனமழை பெய்யம் வாய்ப்பு உள்ளது.