கரையை கடந்து பவர் குறைந்த நிவர் புயல்...இப்போ எங்கே எப்படி இருக்கிறது தெரியுமா?
நிவர் புயல் வட தமிழக கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வட - வட மேற்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு மேற்கு-தென் மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
சென்னை: புதுச்சேரி அருகே அதி தீவிரமாக கரையைக் கடந்த நிவர் புயல் தற்போது வலு குறைந்து புதுச்சேரிக்கு வட - வட மேற்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு மேற்கு-தென் மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலினால் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
புயல் நிவர் தற்போது வட தமிழக கடலோரப் பகுதியில் புதுச்சேரிக்கு வட - வட மேற்கே 85 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு மேற்கு-தென் மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 6 மணி நேரத்தில் மாறக்கூடும்.
அதற்கடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன்காரணமாக, தமிழகம் புதுவை கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 70 இருந்து 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து காற்று மணிக்கு 50 இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதிதீவிர நிவர் புயல் புதுச்சேரி- மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு கரையை கடந்து வலுவிழந்தது!
கனமழை நீடிக்கும்
கனமழையை பொருத்தவரை வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை,திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் .
48 மணிநேரத்திற்கு மழை நிலவரம்
இன்று வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை 27ஆம் தேதி அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கொட்டித்தீர்த்த மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 31 செமீ மழை பெய்துள்ளது. பாண்டிச்சேரி 30 செமீ, விழுப்புரம் 28 செமீ, கூடலூர் 27 செமீ, சென்னை மெரீனா கடற்கரை 26 செமீ, சோழிங்கநல்லூர் 22 செமீ தாமரைப்பக்கம் 19 செமீ பரங்கிப்பேட்டை 18 செமீ, பள்ளிப்பட்டு 17 செமீ, சோழவரம் 16 செமீ, செஞ்சி, பூந்தமல்லி, அம்பத்தூர் , மகாபலிபுரம் , திருவள்ளூர்,கும்மிடிப்பூண்டி 15 செமீ, திண்டிவனம், மதுராந்தகம், செம்பரம்பாக்கம் ,அண்ணா யூனிவர்சிட்டி , வானுற, கொள்ளிடம் , புவனகிரி 14 தலா செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல் பகுதிகளில் நவம்பர் 26 தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்