12 மணிக்கு திறப்பு.. மனசெல்லாம் செம்பரம்பாக்கம்.. மறக்கமுடியாத 2015.. வைரலாகும் #ChembarambakkamLake
செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் திறந்து விடப்படுகிறது
சென்னை: இன்று மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரி முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.. அத்துடன் ட்விட்டரிலும் முந்திக் கொண்டு டிரெண்டாகி வருகிறது. மேலும் ஏரியை திறந்துவிட்டால் அடையாறில் வெள்ளம் பெருகும் என்பதால், ஆற்றங்கரை பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது.. இதனால் அங்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில்தான் சென்னை மற்றும் புறநகரில் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி விட்டது.
முதலில், ஒரு வார காலமாக மழை இல்லாததால் நீர்வரத்து முற்றிலும் இங்கு நின்று போனது.. ஆனால் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மறுபடியும் தொடங்கியுள்ளது... அதனால்தான், ஏரியில் 10 மில்லியன் கனஅடி நீர் நேற்றே சேர்ந்துவிட்டது.
இன்னும் 30 வருடம்தான்.. இந்தியாவின் 30 நகரங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு வரும்.. வெளியான லிஸ்ட்
கொள்ளளவு
இப்போது, அடித்து ஊற்றும் மழையால், முழு கொள்ளளவு 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமானது 21.65 அடியாக அதிகரித்துவிட்டது... விரைவில், ஏரியின் நீர்மட்டம் 22 அடியை கூடிய சீக்கிரம் எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.. அப்படி எட்டினால் உபரி நீர் தானாகவே வெளியேறத் தொடங்கி விடும்.
பொதுப்பணித்துறை
அநேகமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்றே முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொல்லி இருந்தனர். மேலும் 22 அடியை தொட்ட பிறகுதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என்று காஞ்சிபுரம் கலெக்டர் நேற்றுகூட தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், நீர்வரத்துக்கு ஏற்றபடி படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
இதையொட்டி, செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக, சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... அதேபோல, வழுதியம்பேடு, அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்றவும், உத்தரவிடப்பட்டுள்ளது.
அடையாறு ஏரி
"செம்பரம்பாக்கம் ஏரி பொதுப்பணித்துறையின் தொடர் கண்காணிப்பிலேயே உள்ளதால், உபரி நீர் வெளியேற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.. அந்த உபரி நீரை திறந்துவிடும்போதுகூட, அடையாறு ஆற்றில்தான் திறந்து விட முடியும்.. அதனாலேயே வெளியேறும்படியான நிலை உள்ளதே தவிர, இதற்கு பீதி அடைய வேண்டாம்" என்று அமைச்சர் உதயகுமாரும் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர்
இப்போது, அடையாறு ஆற்றங்கரை பகுதி மக்களை வெளியேறும்படி சொன்னதால், அறிவிக்கப்பட்ட அந்த 6 பகுதிகளில் இருந்தும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களை நோக்கி அனுப்பும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டு வருகிறது... அதேபோல ட்விட்டரிலும் செம்பரம்பாக்கம் ஏரி கவனத்தை ஈர்த்து வருகிறது.. இதையொட்டி, அடையாறு பகுதி மக்களுக்கு ட்விட்ர்வாசிகள் நம்பிக்கை வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.
2015 வெள்ளம்
கடந்த 2015 வெள்ளத்தின்போது செம்பரம்பாக்கம்தான் முழு கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்போதும் பெரு மழை ஒரு பக்கமும், புயல் மறுபக்கமும் மிரட்டிக் கொண்டுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியும் முழுக் கொள்ளளவை எட்டி வருவதால் மக்கள் மனதில் அச்ச நிலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் 2015 நிலைக்கு வர விடாமல் தடுக்க அதிகாரிகள் இந்த முறை தீவிரம் காட்டி வருவதால் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.. அதேசமயம், மக்களும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.