நிவர் புயல் கோரத்தாண்டவம் - தாம்பரத்தில் 31.4 செமீ மழை பதிவு... எங்கெங்கு எவ்வளவு மழை
நிவர் புயல் எதிரொலியால் சென்னை தாம்பரத்தில் 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை: நிவர் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தினால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. புயலால் பெரிய சேதம் எதுவும் இல்லாவிட்டாலும் சென்னையிலும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நின்று நிதானமாக புதுச்சேரி அருகே அதி தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் மழை நிதானமாக பெய்தாலும் புறநகரில் காற்றும் மழையும் சூறையாடியது.
கடலூர், புதுச்சேரியில் பேய் காற்றுடன் பெருமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. பயிர்கள் சேதமடைந்தன. நள்ளிரவில் கரையை கடக்கத் தொடங்கிய புயல் நின்று நிதானமாக விடிகாலை 5 மணிக்குதான் கரையை விட்டு வெளியேறியது.
நினைத்த மாதிரி இல்லை.. லேசாக தப்பித்த சென்னை.. ஆனாலும் "அங்குதான்" பிரச்சனை.. நிவரின் தாக்கம்!
புயல் கரையை கடந்தாலும் மழையின் தீவிரம் குறையவில்லை. பல பகுதிகளில் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. புயலினால் பெரிய அளவில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டாலும் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் அதிக பட்சமாக 31.4 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செமீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 27.8 செமீ மழையும், கடலூரில் 27.5 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக வனிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடந்தாலும் உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.