நிவரால் வந்தது ஷவர்... இல்லாமல் போனது பவர் எங்களுக்கு கிடைக்கலை டவர்...சீக்கிரம் நகர்
நிவர் புயலால் கனமழை பெய்து வருவதால் பவர் கட்டாகி விட்டது.
சென்னை: நிவர் புயலால் மழை நின்று ஆடுகிறது. பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்திற்கு மேலாகவே கடலுக்குள் இருந்து மெல்ல நகர்ந்து வரும் நிவர் பலரது தூக்கத்தை கெடுத்து விட்டது. நிவர் கரையை கடந்தால் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதால் சீக்கிரம் எங்களை விட்டு நகர் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையை ஆவலுடன் எதிர்பார்த்தாலும் கூடவே வரும் புயலையும் அனுபவித்துதான் ஆக வேண்டியிருக்கிறது. எத்தனை எத்தனை புயல்கள், வெள்ளங்களினால் பாதிக்கப்பட்டாலும் பெரிதாக யாரும் பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
அரசு எச்சரிக்கை செய்தாலும் அட நாங்க எல்லாம் சுனாமியில ஸ்விம்மிங் போட்டவங்கப்பா. நாங்க பார்க்காத வெள்ளமா? மழையா வரட்டும் பார்த்துக்கலாம் என்று அசால்டாகவே இருந்து விட்டு அப்புறம் வெள்ளம் வந்த பின்னர் அவதிப்படுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் நிவர் புயல் உருவாகும் முன்னதாக இருந்தே பேரிடர் மேலாண்மைத்துறை பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. என்னென்ன வைத்துக்கொள்ள வேண்டும் என்று எத்தனையே அறிவிப்புகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அதன்படி ஒரு சிலர் மட்டுமே மழை, புயலை எதிர்கொள்ள தயாராக இருந்தனர். பெரும்பாலான மக்கள் கொரோனாவின் பாதிப்பில் இருந்தே விடுபடாத நிலையில் புயலை சமாளிக்க எப்படி தயாராவது என்றே கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இதோ புயல் வந்து விட்டது. செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விட்டு விட்டனர். அடையாறு ஆற்றில் வெள்ளமும் வந்து விட்டது. ஆனால் நிவர் மட்டும் எப்போது கரையை கடக்கும் என்று உறுதியாக கணிக்க முடியவில்லை.
நிவரால் கொட்டி வரும் கனமழையால் கடும் வெள்ளமும் இலவச இணைப்பாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. பலரது தூக்கமும் போய் விட்டது. விடிய விடிய காத்திருந்தாலும் புயலின் வேகம் பல மணி நேரம் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நிவரினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஜாலியாக ஒரு கவிதை எழுதியுள்ளார். மழைக்காலத்தில் இது போன்ற கவிதைகள் வைரலாகி வருவது வாடிக்கைதான்.
நிவர் உன்னால் வந்தது ஷவர்
நிவர் உன்னால் சாலைகளில் ஓடுவது ரிவர்
நிவர் உன்னில் நனைந்தால் வரும் ஃபீவர்
நிவர் எங்கள் வீட்டில் இல்லை பவர்
நிவர் எங்களுக்கு கிடைக்கலை டவர்
நிவர் உன் நியூஸ் கேட்டால் எங்களுக்கு வரும் ஃபியர்
நிவர் உன் வேகத்தால் விழும் பழைய சுவர்
நிவர் உனக்கு இல்லை எவரும் நிகர்
நிவர் இனி எங்களை காப்பது எவர்
நிவர் சீக்கிரம் இங்கிருந்து நகர்
மழை காலத்தில் இதெல்லாம் என்னப்பா கவிதை என்று யோசிக்கலாம் எவ்வளவு நேரம்தான் புயலைப் பற்றியே கேட்டு பயந்து கொண்டிருப்பது இதுவும் கடந்து போகும் என்று இவரைப்போல கவலைப்படாமல் ஜாலியாக நடப்பதை வேடிக்கை பாருங்கள் மக்களே.