கரையை கடந்த நிவர் புயல்- 4 மாவட்டங்களில் கனமழை;20 மாவட்டங்களில் மிதமான மழை
நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: நிவர் புயல் கரையை கடந்துவிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் திண்டுக்கல் உட்பட 20 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
நிவர் புயலின் தாக்கத்தினால் சென்னையில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. கடலூரில் கடந்த 12 மணி நேரத்தில் 16 செ.மீ மழை பெய்துள்ளது புயல் கரையை கடந்த பின்னரும் கனமழை தொடரும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
புயல் கரையை கடந்தாலும் காற்றுடன் கனமழை நீடிக்கும். அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
புயலின் வேகத்தினால் பல பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடவே கனமழையும் பெய்து வருவதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இப்போது நிவர் புயல் வலு குறைந்ததால் மழையும் படிப்படியாக குறையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.