தாக்க தயாரான நிவர் புயல்... தடுக்க களமிறங்கிய முதல்வர்கள் பழனிச்சாமி, நாராயணசாமி
நிவர் புயல் தாக்க தயாராகி வரும் நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநில முதல்வர்கள் பம்பரமாக சுழன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை மாலை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நிவர் புயலானது தமிழகத்தை மட்டுமல்லாது புதுச்சேரியையும் பலமாக தாக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் தமிழக முதல்வர் பழனிச்சாமியும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் நேரடியாக களமிறங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர்.
நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புயலை கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு மையம் அமைக்கப்ட்டுள்ளது. நிவர் புயல் தொடர்பான உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்றார். செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி எட்டிய உடன் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். புயலை எதிர்கொள்ளவும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
நிவர் புயல் : மக்களை பாதுகாக்க அரசு தீவிரம் - 36 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
களமிறங்கிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் புதுச்சேரியில் புதன்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள விழுகின்ற நிலையில் உள்ள மரங்களை, நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி ஊழியர்கள் மரம் வெட்டும் இயந்திரம் மூலமாக அகற்றி கொண்டிருந்தார்கள். இதனை முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அப்புறப்படுத்தமாறு கூறினார்.
காரைக்கால் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் வியாழன் காலை வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் கையிருப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டு கொண்டுள்ள அரசு, பேருந்துகள் இயக்கப்படாது என்றும் கூறியுள்ளது.
இதேபோல் காரைக்காலில் நாளை காலை 6 மணி முதல் 24 மணி நேரத்திற்கு ஊரடங்கை அமல்படுத்தி பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் நாளை அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
புயலை எதிர்கொள்ள தமிழக முதல்வர் பழனிச்சாமியும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் நேரடியாக களமிறங்கியுள்ளதால் அமைச்சர்களும், அதிகாரிகளும் விடிய விடிய கண் விழித்து பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.