அது என்ன அதிதீவிரம்? ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிவிட்டது.. இனிதான் நிவர் புயலின் ஆட்டமே!
சென்னை: அதிதீவிர புயல் என்ற ஸ்தானத்தை நிவர் புயல் எட்டி இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அது என்ன அதிதீவிர புயல் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.. அதை தீர்க்கத்தான் இந்த குட்டி கட்டுரை!
பொதுவாக ஒரு புயல் உருவாகும் முன் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும்.
பின் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலிமை அடைந்து அது புயலாக மாறும். இது புயலாக மாறும் பொழுதுதான் இதற்கு வரிசைப்படி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நாடுகள் மூலம் பெயர் சூட்டப்படும்.
எப்படி
இந்த புயல் 7 வகையில் பிரிக்கப்படும். முதல் இரண்டு வகை காற்றழுத்த தாழ்வு நிலை ஆகும். மூன்றாவது வகை சாதாரண புயல் ஆகும். இது 88 கிமீ வேகத்திற்கும் குறைவான வேகம் கொண்டு இருக்கும். இந்த புயல்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதோடு இது போன்ற புயல்கள் பெரிய அளவில் கடல் கடந்து கரையை கடக்காது. கரையை கடக்கும் முன் இது போன்ற புயல்கள் வலிமை இழக்கும்.
வலிமை இழக்கும்
ஆனால் இதற்கு மேல் வேகம் இருந்தால் அந்த புயல்கள் பெரும்பாலும் கரையை கடக்கும். 89 - 117 கிமீ வேகம் இருந்தால் அது தீவிர புயல் என்று அழைக்கப்படும். இந்தியாவை பெரும்பாலும் அதிகமாக தீவிர புயல்கள்தான் தாக்கி உள்ளது. ஆனால் இதிலும் கூட சேதங்கள் கட்டுப்படுத்த கூடிய அளவிற்கே இருக்கும்.
அதி தீவிரம்
இதில் மூன்றாவது ரகம்தான் அதி தீவிர புயல். இந்த அதிதீவிர புயல் என்பது 118-165 கிமீ வேகத்தில் வீச கூடியது. இதற்கு அடுத்து தீவிர சூறாவளி 166-215 கிமீ வேகத்திலும், அதி தீவிர சூறாவளி 215 கிமீக்கும் அதிகமான வேகத்திலும் வீசும். தற்போது தமிழகத்தை தாக்கும் நிவர் புயல் 145கிமீ -153 கிமீ வேகம் வரை வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிகம் இருக்கும்
இந்த புயல் அதிகபட்சம் 153 கிமீ வேகத்தில் காரைக்கால் அருகே கரையை கடக்கும். சமயங்களில் இந்த வேகம் இதை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் நிவர் புயலை அதி தீவிர புயல் என்று அறிவித்து உள்ளனர். இந்த புயல் நினைத்த வேகத்தை விட அதிகம் சென்றாலும் 166 கிமீ வேகத்தை தாண்ட வாய்ப்பு இல்லை. இதனால் நிவர் அதி தீவிர புயலாக கரையை கடக்கும்.
மோசம்
இந்த நிவர் புயல் இதனால் அதிக சேதத்தை ஏற்படுத்தும். முதலில் தீவிர புயலாக இருந்த நிவர் தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இதை இனி தடுக்கவே முடியாது. கஜா, தானே புயலுக்கு இணையான வேகத்தில் இந்த புயல் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது வலிமை இழக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.