இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்?
சென்னை: தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக தீவிரமடைந்து தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும். இது நவம்பர் 25 பிற்பகலுக்குள் காரைகால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலை கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும். இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பபட்டுள்ளது.
எப்போது கடக்கும்
இந்த புயல் நாளை மறுநாள் மதியம் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் புயல் கடக்க வாய்ப்பு உள்ளதால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வேகம் எப்படி
இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசும். இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 89 முதல் 117 கிமீ வேகத்தில் காற்று வீசும். நான்கு வருடங்களுக்கு பிறகு புயல் சின்னம் சென்னை அருகே கரையை கடப்பதால் உச்சக்கட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கனமழை எச்சரிக்கை
புயல் கரையை கடக்கும் நவம்பர் 25ம் தேதி மற்றும் அதற்கு முதல் நாள் 24ம் தேதி ஆகிய நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் அதீத கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு போக வேண்டாம்
இதனிடையே புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே காரைக்கால் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.