ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு.. அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்.. முதல்வரும் விடவில்லையே.. செம கெத்து!
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இருக்கும் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உதவும், பாதிப்புகளை பார்வையிடவும் நேரடியாக களத்திற்கே சென்று உள்ளனர்.
கஜா, தானே புயலை போல நிவர் புயலும் தமிழகத்தை மோசமாக பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நோக்கி நிவர் புயல் வந்து கொண்டு இருக்கும் நிலையில் சென்னையில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் இன்று காலையில் இருந்து விடாமல் மழை பெய்து பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இப்படி ஒரு வேகம் நம்மூரில் எந்த புயலுக்கும் கிடையாது.. நாளுக்கு நாள் அதிகரிப்பு.. மிரட்டும் நிவர்
வெள்ளம் வந்துவிட்டது
சென்னையில் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, தி நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு போன்ற பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி சில வீடுகளுக்குள் சென்றுள்ளது. வேளச்சேரி மொத்தமும் வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.
உதவிப்பணிகள்
இதனால் சென்னையில் இருக்கும் மக்களுக்கு அவசரமாக உதவி பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. புயலுக்கு முன்பே இந்த நிலை உள்ள போது புயலுக்கு பின் இந்த நிலைமை இன்னும் மோசமாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவி தேவைப்படும் இப்படிப்பட்ட நேரத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இரண்டு பேருமே களத்திற்கு சென்று உள்ளனர்.
சென்னை
சென்னையில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டார். காக்கி கேப் போட்டுகொண்டு, ரெயின் கோட் மாட்டி நேரடியாக களத்திற்கே சென்று மக்களை சந்தித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டதோடு, அவர்களுக்கான உதவிகளை செய்தார்.
நடந்து சென்றார்
ரெயின் கோட் போட்டுகொண்டு தண்ணீரில் இறங்கி அப்படியே சில கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதோடு உணவு, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு பின் டிவிட் செய்த ஸ்டாலின் தமிழக அரசை குறை சொல்லாமல்.. அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம் என்று கூறி இருந்தார்.
ஒத்துழைப்போம்
ஸ்டாலின் தனது டிவிட்டில் சென்னையில் #CycloneNivar காரணமாக நீர் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றேன்; உதவிகளையும் வழங்கினேன்.சூழல் மிரட்டுகிறது! அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம். முதலில், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, தேவையான உதவிகளைச் செய்வோம் என்பதை மனதில் கொண்டு களமிறங்குவோம்; மக்களைக் காப்போம்!, என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஸ்டாலின் செயல்
ஒரு பக்கம் ஸ்டாலின் இப்படி ஆளும் கட்சியை குறை சொல்லாமல்.. களமிறங்கி பணிகளை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் முதல்வர் பழனிசாமியும் மழை, புயலை பொருட்படுத்தாமல் நேரடியாக களத்திற்கே சென்று விட்டார். நேரடியாக செம்பரம்பாக்கம் பகுதிக்கே சென்று அங்கு ஏரி திறப்பதை பார்வையிட்டார். என்னுடைய மேற்பார்வையில்தான் ஏரி திறப்பு நடக்கிறது என்று முதல்வர் உணர்த்தி உள்ளார்.
ஆபத்து இல்லை
ஏரி திறப்பால் ஆபத்து இல்லை என்று கூறிய முதல்வர் அதை உணர்த்தும் வகையில் நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார். அதோடு அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்களும் களத்தில் நிலவரத்தை கண்காணித்து வருகிறார்கள். புயலுக்கு ஏற்றபடி இரண்டு கட்சிகளுமே உதவிகளை செய்ய தயார் ஆகி வருகிறது.
தேர்தல்
புயல் வெள்ளம் என்றால் வட இந்திய தலைவர்கள் ஹெலிகாப்டரில் பார்வை இடும் நிலையில்.. தமிழகத்தில் முதல்வர், எதிர்கட்சித் தலைவர் இருவருமே இன்று நேரடியாக களத்திற்கு சென்று உள்ளனர். தேர்தல் காலம், இப்படித்தான் செய்வார்கள் என்று வாதம் வைக்கலாம்.. ஆனால் அதற்காகவாது இரண்டு கட்சிகளும் களத்திற்கு வருகிறது என்பது ஒரு விதத்தில் சந்தோசம் அளிக்க கூடிய விஷயம்தான்.