நீர் நிலம் காற்று என பயணிக்கும் நிவர் - கரையை கடந்து 6 மணி நேரத்திற்கு பிறகே வலுவிழக்கும்
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை நெருங்குகிறது.
சென்னை: பல புயல்கள் கரையை கடந்த உடன் வலுவிழந்து விடும். சில புயல்கள் கரையை கடந்த பின்னரும் நின்று பல மணிநேரம் கோரத்தாண்டவமாடும். நிவர் புயல் இரவு கரையை கடந்தாலும் 6 மணி நேரம் கழித்தே வலுவிழக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. எனவே புயல் கரையை கடந்து விட்டது என்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். புயல் கரையை கடந்த பின்னர்தான் அதன் பாதிப்பு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதிதீவிர புயலாக உருவாகியுள்ளது நிவர். வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலானது கடலூரை நோக்கி நெருங்கி வருகிறது.
மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகரும் இந்த புயல் இன்று இரவு 8 மணிக்கு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் கடலில் மையம் கொண்டிருப்பதால் இரு தினங்களாகவே கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தற்போது 214 கிலோ மீட்டர் தூரத்தில் நிவர் புயல் உள்ளது. புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு உள்ளது. கடலூரை நெருங்கி வரும் நிவர் புயல் இரவு மரக்காணம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் கணித்த திசையில் நகர்கிறது நிவர் புயல் என்று தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடலில் உருவாகி நிலத்தில் கரையை கடந்தாலும் காற்றாக 6 மணிநேரம் பயணித்து பின்னரே வலுவிழக்கும். நிலம், நீர், காற்று என பயணிப்பதால் அதிக கனமழை பெய்யும்.
புயலின் மையப்பகுதி 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நிவர் புயல் கரையை கடந்த பின்னர் பாதிப்பு அதிகமாக இருக்கும். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பல மாவட்டங்களில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசக்கூடும்.
இந்த காற்றின் வேகத்தினால் குடிசை வீடுகள் பாதிக்கலாம், மரங்கள் முறிந்து விழலாம். மின் கம்பங்கள் பாதிப்புக்கு ஆளாகலாம். விளம்பர போர்டுகள் பாதிப்பிற்கு ஆளாகலாம். பயிர்கள் பலத்த சேதமடையலாம். எனவே பொதுமக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் கரையை கடந்து விட்டது என்று உடனே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.