நெய்வேலி பாய்லர் விபத்தில் 6 பேர் பலி- உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி இரங்கல்
சென்னை: நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் பலியான 6 பேர் குடும்பங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர்கள் வெடித்து சிதறுவதும் உயிர் பலிகள் நிகழ்வதும் தொடருகின்றன. கடந்த மாதம் நடந்த பாய்லர் வெடிவிபத்தில் 4 பேர் பலியாகினர். இன்றும் பாய்லர் வெடித்து சிதறியதில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
என்எல்சி அனல் மின்நிலைய விபத்து - பாய்லர் வெடித்து 5 பேர் பலி - 17 பேர் படுகாயம்
அமித்ஷா ட்வீட்
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நெய்வேலி விபத்தில் பணியாளர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி இரங்கல்
இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி 2-ஆம் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, காயமுற்றோர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
திருமாவளவன் வலியுறுத்தல்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருப்பதாவது: நெய்வேலி அனல் மின்நிலையத்தில்,5ஆவது கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 6பேர் உடல்கருகிச் சாவு.மேலும் 20பேர் படுகாயம். சாவு எண்ணிக்கை கூடுமெனத் தெரிகிறது. பலியானோர் குடும்பத்துக்குத் தலா ரூ. ஒருகோடியும் காயமுற்றோருக்கு பாதிப்புக்கேற்ப தலாரூ 25இலட்சம்-50இலட்சம் இழப்பீடு வழங்கவும். இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தினகரன் அறிக்கை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலர் தினகரன் வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றரை மாதத்திற்கு முன்பு இதே போன்றதொரு விபத்து நிகழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.
உரிய நடவடிக்கை தேவை
தற்போது மீண்டும் விபத்து நேரிட்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இப்படி அடுத்தடுத்து விபத்துகள் நடப்பது நிர்வாகத்தின் கவனக்குறைவையே காட்டுகிறது.இதன் பிறகாவது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை என்.எல்.சி நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.