தமிழக பாஜகவிற்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமனம்.. தீயாய் பரவிய செய்தி.. வானதி சீனிவாசன் இல்லைங்கிறார்
சென்னை: தமிழக பாஜகவிற்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, வானதி சீனிவாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானதும், முதல் வேளையாக, தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார்.
இப்போது சரியாக 2 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் தமிழக பாஜகவிற்கு தலைவர் பதவி நியமிக்கப்படவில்லை. பல்வேறு தலைவர்கள் பெயர்களை, பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.
இந்த நிலையில், சில ஊடகங்களில், இன்று மாலை ஒரு செய்தி தீயாக பரவியது. அதாவது தமிழக பாஜகவிற்கு, 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதுதான் அந்த செய்தி. மேலும், அந்த நால்வர் யார் என்ற பட்டியலையும், ஊடகங்கள் வெளியிட்டன.
உண்மையான தகவல் அல்ல....@news7tamil pic.twitter.com/UriGnqjuAA
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 8, 2019
பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி ஆகிய நான்கு பேர், பாஜகவின் பொறுப்பு தலைவர்கள் என அதில் அறிவிப்பு வெளியானது. ஆனால் சில நிமிடங்களில் ஊடகங்கள் அந்த செய்தியை நிறுத்திவிட்டன.
இந்த நிலையில், வானதி சீனிவாசன், தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த செய்தியை ஷேர் செய்து, உண்மையான தகவல் இல்லை, என்று விளக்கம் அளித்துள்ளார். இதன் பிறகுதான், இந்த குழப்பம் முழுக்க நீங்கியுள்ளது.